ஜனாதிபதியால் நிபுணர் குழு நியமிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன, ஆனால் இதன் முன்னேற்றகரமான நகர்வுகள் என்ன? - சம்பந்தன் கேள்வி - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 13, 2021

ஜனாதிபதியால் நிபுணர் குழு நியமிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன, ஆனால் இதன் முன்னேற்றகரமான நகர்வுகள் என்ன? - சம்பந்தன் கேள்வி

தமிழ் மக்களின் இறையாண்மையின் அடிப்படையில் அவர்கள் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்திக் கொள்கின்ற வகையிலும், அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும், தமிழ் பேசும் மக்களின் சகல உரிமைகளையும் நாடு முழுவதும் பயன்படுத்தக் கூடிய வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைகள் அனைத்திற்கும் நிரந்தரமான தீர்வு அதுவும் பக்குவமான தீர்வு கிடைக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.

மக்களுக்கு உறுதியளித்தமை பிரகாரம் அடுத்த ஆண்டுக்குள் புதிய அரசியல் அமைப்பு மற்றும் தேர்தல் முறைமை உருவாக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவத்தின் 72ஆவது ஆண்டு பூர்த்தி விழாவில் தெரிவித்திருந்தார்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் ஜனாதிபதியின் வாக்குறுதிகள் குறித்து வினவியபோதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், சகல மக்களினதும் உரிமைகளையும் உள்வாங்கிய வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு.

அதுவும் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். எனினும் இரண்டு ஆண்டுகளாக அரசாங்கம் இதற்கான எந்த முயற்சிகளையும் அக்கறையுடன், இதய சுத்தியுடன் முன்னெடுக்கவில்லை.

அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து ஆராய ஜனாதிபதி நிபுணர் குழுவொன்றை நியமித்தார். அந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இதன் முன்னேற்றகரமான நகர்வுகள் என்ன?

இப்போது எந்த கட்டத்தில் இந்த முயற்சிகள் உள்ளதென்ற எதுவும் நாட்டு மக்களுக்கு தெளிவாக தெரியாது. எமக்கும் இது குறித்த அறிவிப்புகள் கிடைக்கப் பெறவில்லை.

சகல கட்சிகளுடனும் அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து சகல தரப்பின் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர். நாமும் எமது கருத்துக்களை அங்கு பதிவு செய்துள்ளோம். எனினும் முன்னேற்றகரமான நகர்வுகள் எதுவும் இடம்பெறவில்லை.

இந்த நாட்டில் முப்பது ஆண்டு கால யுத்தம் நடைபெற்றுள்ளது. நீண்ட காலமாக நாட்டில் அமைதியின்மை நிலைமையே காணப்பட்டது. இந்த சகல பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணம் என்னவென்றால், தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் பொருட்படுத்தாமை, மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க ஆட்சியாளர்கள் நினைக்காதமையேயாகும்.

தமிழ் மக்களின் இறையாண்மையின் அடிப்படையில் அவர்கள் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்திக் கொள்கின்ற வகையில், அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொடுக்கக் கூடிய வகையில், தமது ஜனநாயக உரிமைகளுக்கு முறையான அங்கீகாரம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயற்படுகின்றனர்.

தமிழ் பேசும் மக்களின் சகல உரிமைகளும் நாடு முழுவதும் பயன்படுத்தக் கூடிய வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு அமைய வேண்டும் என்றால் தமிழ் மக்களின் உரிமைகளையும் அங்கீகரித்த அமுல்படுத்தப்பட்ட அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டால்தான் சாத்தியப்படும்.

ஆகவே நாட்டில் முறையான அரசியல் சாசனம் உருவாகினால் மட்டுமே, அபிவிருத்தியும், முன்னேற்றமும் நாட்டில் அமைதியும் ஏற்படும். எனவே எந்தவித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உள்ளடக்கிய புதிய அரசியல் சாசனம் விரைவாக உருவாக்கப்பட வேண்டும் என்பதையே தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டு நிற்கின்றது.

அதேபோல் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்மைக் காலமாக சர்வதேச பிரதிநிதிகளை நாம் சந்தித்த சகல சந்தர்ப்பங்களிலும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் போன்ற காரணிகளை வலியுறுத்தியுள்ளோம். அரசியல் அமைப்பின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்ற காரணிகளை சர்வதேச தரப்பினருக்கு நாம் தெளிவாக கூறியுள்ளோம் என்றார்.

கேசரி

No comments:

Post a Comment