தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கம் தோல்வியடையலாம் : விமர்சனங்களுக்குள்ளாகுவது எமது குடும்பத்திற்கு சாதாரணமாகி விட்டது - சஷிந்ர ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Sunday, October 24, 2021

தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கம் தோல்வியடையலாம் : விமர்சனங்களுக்குள்ளாகுவது எமது குடும்பத்திற்கு சாதாரணமாகி விட்டது - சஷிந்ர ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்)

விசத்தை உட்கொண்டு மக்கள் இறந்தாலும் பரவாயில்லை தனக்கு தேர்தல் வெற்றிதான் முக்கியம் என ஜனாதிபதி கருதவில்லை. மக்களின் உடலாரோக்கியத்தை கருத்திற் கொண்டே சேதனப் பசளைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கம் தோல்வியடைய நேரிடலாம் என விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் சஷிந்ர ராஜபக்ஷ தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

விவசாயத்துடன் தொடர்பில்லாதவர்களும், சேதனப்பசளை தொடர்பில் தெளிவில்லாதவர்களும்தான் பெரும்பாலான போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். சிறந்த திட்டங்களை செயற்படுத்தும்போது சவால்களும், முதற்கட்ட தோல்விகளும் ஏற்படுவது சாதாரணமானது.

தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ இந்தத் திட்டத்தை செயற்படுத்தவில்லை. நாளை தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கம் நிச்சயம் தோல்வியடையும். விசத்தை உண்டு மக்கள் இறந்தாலும் பரவாயில்லை. எனக்கு தேர்தல் வெற்றிதான் முக்கியம் என ஜனாதிபதி கருதவில்லை.

மக்களின் நலனை உடலாரோக்கியத்தை கருத்திற்கொண்டு தீர்மானம் எடுக்கும் அரச தலைவர்கள் குறைவாக உள்ளனர். விமர்சனங்களுக்குள்ளாகுவது எமது குடும்பத்திற்கு சாதாரணமாகி விட்டது. விமர்சனங்களுக்கு மத்தியில் எமது கிராமங்களுக்கு நிச்சயம் செல்வோம்.

ஒருபோதும் முடிவிற்கு கொண்டு வரமுடியாது என்று குறிப்பிட்ட 30 வருட கால யுத்தத்தை நிறைவு செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

யுத்தத்தை குறுகிய காலத்தில் நிறைவு செய்யும் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்றார். சிறந்த திட்டமிடலுடன் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

சேதனப்பசளையைக் கொண்டு பெரும்பாலான விவசாயிகள் நெற்செய்கையிலும், மரக்கறி விவசாயத்திலும் ஈடுபடுகிறார்கள். சேதனப் பசளையை பயன்படுத்தி விவசாய நடவடிக்கையினை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளார்கள்.

சேதனப் பசளைத்திட்டம் தற்போது அரசியலாக்கப்பட்டு விட்டது. சேதனப் பசளைத் திட்டம் தொடர்பில் ஒருசில குறைப்பாடுகள் காணப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இதனை தேசிய பிரச்சினையாக கருத்திற் கொண்டு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment