ஞானசார தேரர் தலைமையிலான 'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி : விசேட அவதானம் செலுத்தியுள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை - News View

About Us

About Us

Breaking

Saturday, October 30, 2021

ஞானசார தேரர் தலைமையிலான 'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி : விசேட அவதானம் செலுத்தியுள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை

(எம்.மனோசித்ரா)

ஞானசார தேரர் தலைமையிலான 'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியில் கத்தோலிக்க மற்றும் இந்து பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை, அருட் தந்தை சிறில் காமினி குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கத்தோலிக்க ஆயர் பேரவை விசேட அவதானம் செலுத்தியுள்ளது.

கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைமையில் வெள்ளிக்கிழமை (29) பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையுடன் ஆளும், எதிர்தரப்பு கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேட சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தனர். இந்த சந்திப்பின் போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

ஆளுந்தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, ஹெக்டர் அப்புஹாமி ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த சந்திப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவிடம் வினவிய போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் செயற்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நிலாந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அத்தோடு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மேலும் 22 காணப்படுகின்றன. அவை இன்னும் பாராளுமன்றத்திற்கோ, கத்தோலிக்க சபைக்கோ வழங்கப்படவில்லை.

பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கி பேராயர் உள்ளிட்டோரால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்திற்கு இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறவில்லை.

அவ்வாறிருக்கையில் ஜனாதிபதியினால் 'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்பதை நடைமுறைப்படுத்துவதற்காக ஞானசார தேரர் தலைமையில் நியமித்துள்ள செயலணியில் கத்தோலிக்கம் மற்றும் இந்து மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எவரும் உள்வாங்கப்படவில்லை.

குண்டு காணப்படுவதாகவும், அது காணப்படும் இடத்தை தான் அறிவேன் என்றும், மீண்டும் குண்டு வெடிக்கும் என்றும் ஞானசார தேரர் கூறுகின்றார். இது தொடர்பில் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறிருக்கையில் அருட்தந்தை சிறில் காமினியை மாத்திரம் குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைத்து, அவரை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அருட்தந்தை சிறில் காமினி எமக்கு நியாயம் வழங்கக் கோருபவராவார். வேறு எதனையும் அவர் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறிருக்கையில் எமக்கு நியாயத்தை வழங்குவதற்கு பதிலாக மேலும், அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது என்றார்.

No comments:

Post a Comment