(எம்.மனோசித்ரா)
நாட்டில் மீண்டுமொரு கொவிட் பரவல் அலை ஏற்படாது என்று கூற முடியாது. மீண்டுமொரு அலை ஏற்படுமாயின் அதனை கட்டுப்படுத்த முடியும் என்று நாம் நம்பவில்லை. எனவே கொவிட் வைரஸ் பரவுவதற்கு இடமளிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் மீண்டுமொரு கொவிட் பரவல் அலை ஏற்படாது என்று கூற முடியாது. தாம் முழுமையாக கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தி விட்டதாக எண்ணிய சில நாடுகளில் பின்னர் பாரிய அழிவுகள் ஏற்பட்டமையை அவதானித்திருக்கின்றோம். அபாயத்தை உணராமல் அசமந்ப் போக்குடன் செயற்பட்டால் அதே போன்றதொரு நிலைமையே இலங்கையிலும் ஏற்படும்.
எனவே கொவிட் வைரஸ் பரவுவதற்கு இடமளிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என்று பொதுமக்களை அறிவுறுத்துகின்றோம். காரணம் மீண்டுமொரு அலை ஏற்படுமாயின் அதனை கட்டுப்படுத்த முடியும் என்று நாம் நம்பவில்லை.
மூன்றாம் கட்டமாக வழங்குவதற்கு தேவையான தடுப்பூசி தொகை கிடைக்கப் பெற்ற பின்னர் அதனை வழங்கும் காலம் தொடர்பில் அறிவிக்கப்படும்.
அத்தோடு மூன்றாம் கட்ட தடுப்பூசி தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுற்று நிரூபமும் வெளியிடப்படும். எனவே அதுவரையில் பொறுமையாக இருக்க வேண்டும்.
மேலும் பொதுப் போக்கு வரத்துக்களை பயன்படுத்தும் போது சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அத்தியாவசியமானதாகும். அதனை முறையாக நிர்வகிக்கா விட்டால் அதன் மூலம் அபாயம் ஏற்படக்கூடும். எனவே இவ்விடயத்தில் சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment