நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலையே ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் ஏற்படப்போகிறது - கனிய எண்ணெய் மற்றும் சேவை சங்கம் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, October 3, 2021

நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலையே ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் ஏற்படப்போகிறது - கனிய எண்ணெய் மற்றும் சேவை சங்கம் எச்சரிக்கை

(இராஜதுரை ஹஷான்)

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்திய நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு வழங்கும் கொள்ளையுடன் ஜனாதிபதி செயற்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என கனிய எண்ணெய் மற்றும் சேவை சங்கத்தின் தலைவர் பந்துல சமன் குமார தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் 101 குதங்களை கொண்டதாக திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டன. கனிய எண்ணெயை சேமிக்கும் பிரதான தாங்கியாக திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் காணப்பட்டன.

1987ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனாவிற்கும், இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கி விவகாரத்தில் இலங்கை இந்தியாவை தவிர்த்து ஏனைய நாடுகளுடன் தொடர்புக் கொள்ளக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய பிரதமரான ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சிக் காலத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளில் 99 தாங்கிகள் இந்திய நிறுவனத்திற்கு 35 வருட கால ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டன.

இலங்கையின் கனிய எண்ணெய் விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 99 எண்ணெய் தாங்கிகளில் 15 தாங்கிகளை இந்திய நிறுவனம் பயன்படுத்துகிறது.

2003ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை திருத்தி புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடுகள் 2017 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது. புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியது.

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள 15 தாங்கிகளை தொடந்து அந்நிறுவனத்திற்கு வழங்கவும்,10 தாங்கிகளை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கவும், மிகுதி 74 தாங்கிகளை இந்திய நிறுவனமும், கனிய எண்ணெய் கூட்டுத்தாபனமும் ஒன்றினைந்து அபிவிருத்தி செய்யவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் அப்போதைய அரசாங்கம் ஒப்பந்தத்தை கைச்சாத்திடவில்லை.

இந்தியாவின் ஐ.ஓ.சி நிறுவனத்தின் வசமுள்ள தாங்கிகளில் 85 தாங்கிகளை முழுமையாகவும், 16 தாங்கிகளை பகுதியளவிலும் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. 2003 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்னர் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திட முயற்சிப்பது ஏற்புடையதல்ல.

பெருமளவிலான தாங்கிகளை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் வசம் வைத்துக் கொள்வதை விடுத்து இந்திய நிறுவனத்திற்கு மீண்டும் அனைத்து உரிமைகளையும் வழங்க முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அரசாங்கம் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் சட்டத்தை திருத்தியமைக்க தீர்மானித்துள்ளது. சட்டம் திருத்தியமைக்கப்பட்டதன் பின்னர் கனிய வள கூட்டுத்தாபனத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான நோக்கம் அரசாங்கத்திடம் உள்ளது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. என்றார்.

No comments:

Post a Comment