துன்பத்தை உணராமல் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கெதிராக தலைநகரில் மாபெரும் விவசாயிகள் பேரணியை நடாத்தி மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்போம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சூளுரை - News View

About Us

About Us

Breaking

Sunday, October 31, 2021

துன்பத்தை உணராமல் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கெதிராக தலைநகரில் மாபெரும் விவசாயிகள் பேரணியை நடாத்தி மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்போம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சூளுரை

நா.தனுஜா

ஒட்டு மொத்த நாட்டு மக்களுக்கும் உணவை வழங்கிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தற்போதைய அரசாங்கம் முழுமையாகச் சூறையாடியிருக்கின்றது. விவசாயிகளின் துன்பத்தை உணராமல் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிராக இதற்கு முன்னரொருபோதுமில்லாத வகையில் தலைநகர் கொழும்பில் மாபெரும் விவசாயிகள் பேரணியை நடத்தி விவசாயிகளின் மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹிரியால தொகுதி அமைப்பாளர் விபுல குணரத்னவின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஹிரியால, இப்பாகமுவ பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்களினால் நாடளாவிய ரீதியிலுள்ள விவசாயிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்களுடைய உரிமைகளை ஜனநாயக முறையில் வென்றெடுப்பதற்காக நாம் இப்போது அவர்களுடன் வீதிகளில் இறங்கிப் போராடுகின்றோம். நாட்டு மக்கள் அனைவருக்கும் அவசியமான உணவை வழங்கிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தற்போதைய அரசாங்கம் முழுமையாகச் சூறையாடியிருக்கின்றது.

இந்நாட்டில் கடந்த காலங்களில் ஆட்சிபீடமேறிய அனைத்து அரசாங்கங்களும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவமளித்து, அவற்றைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே செயற்பட்டு வந்திருக்கின்றன.

ஆனால் முதலில் 69 இலட்சம் பேரின் வாக்குகள் மூலம் தெரிவாகி, இரண்டாவது முறையாகவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம் விவசாயிகளின் நலன்களை சற்றும் பொருட்படுத்தவில்லை.

அதன் முதற்கட்டமாக இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினிகளின் இறக்குமதியைத் தடை செய்வதாகத் திடீரென்று அறிவித்தது. அவையின்றி விவசாயிகளால் எவ்வாறு பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்?

விவசாயம் மற்றும் பயிர்ச் செய்கை தொடர்பில் போதிய தெளிவற்றவர்களும் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாதவர்களும் குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து மேற்கொண்ட தீர்மானங்களினால் இன்றளவில் விவசாயிகள் மிக மோசமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்கின்றேன்.

அதுமாத்திரமன்றி மறுக்கப்படும் விவசாயிகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இப்போதும், எப்போதும் வீதிகளில் இறங்கிப் போராடுவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அதன்படி இதற்கு முன்னரொருபோதும் இல்லாத வகையில் பெருமளவான விவசாயிகளை தலைநகர் கொழும்பிற்கு அழைத்துவந்து, விவசாயிகள் பேரணியை நடாத்தி, அவர்களின் துன்பத்தை உணராத அரசாங்கத்திற்கு அதனை உணரவைப்போம்.

நாட்டு மக்களின் வாக்குகள் மூலம் ஆட்சிபீடமேறிய அரசாங்கத்தின் பொறுப்பு விவசாயிகள் உள்ளடங்கலாக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதும் அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதுமேயன்றி, நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதல்ல என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment