அமெரிக்க நீதிமன்றத்தில் டுவிட்டர் கணக்கு முடக்கத்தை எதிர்த்து டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்தார்.
ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்தார். அவரது ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தினார்கள். இதில் கடந்த ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்குள் புகுந்த டிரம்ப் ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
வன்முறைக்கு டிரம்ப்பின் பேச்சுக்களே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் முடக்கியது. பின்னர் அவரது டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுவதாக அறிவித்தது. மேலும் மற்ற சமூக வலைத்தளங்களும் தடை விதித்தன.
இதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் டுவிட்டர், கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்களை எதிர்த்து டிரம்ப் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த நிலையில் தனது டுவிட்டர் கணக்கை மீண்டும் இயக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி டிரம்ப் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் டுவிட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகள் அரசியலை ஆக்கிரமிக்கும் வகையிலும் முன் எப்போதும் இல்லாத வகையிலும் ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கிறது. தலிபான்கள் கூட சுதந்திரமாக டுவிட்டரில் பதிவிடுவதற்கு டுவிட்டர் நிர்வாகம் அனுமதிக்கிறது. ஆனால் நான் ஜனாதிபதியாக இருந்த போது எனது டுவிட்டுகள் போலி தகவல்களை கொண்டவை என்று தொடர்ந்து முத்திரை குத்தியது என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment