(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
இறுதி யுத்த காலத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களுக்கு என்ன நடந்தது? கொல்லப்பட்ட சிறுவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும். இந்த அரசாங்கம் சட்டம் நீதி குறித்து பேசினாலும் தமிழர்கள் இந்த நாட்டில் எந்த நிலைமையில் உள்ளனர் என்பதை சர்வதேசம் விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.
கொவிட் காலத்தில் கடந்த மூன்று மாதங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 39 பேர் இரவிரவாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21), இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தண்டனைச்சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த 2009ஆம் ஆண்டு பல சிறுவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். குறிப்பாக 18.05.2009 ஆம் ஆண்டில் முன்னாள் போராளிகளின் பிள்ளைகள் இவ்வாறு இராணுவத்திடம் தாய் தந்தையுடன் ஒப்படைக்கப்பட்டனர் (ஒப்படைக்கப்பட்டவர்களின் முழு பெயர் விபரங்களை சபையில் முன்வைத்தார்)
இக்கால கட்டத்தில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றினேன். அப்போது என்னிடம் கல்வி கற்ற மாணவர்கள் இந்த பட்டியலில் உள்ளனர். அவர்கள் அப்போது ஆறாம் ஏலாம் தரங்களில் கல்வி கற்றனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனும் ஆறாம் ஆண்டில் படித்து, இவர்களுடன் இராணுவத்தில் சரணடைந்து கொல்லப்பட்டவர்களில் ஒருவர்.
ஆகவே இவ்வாறு உயிருடன் இராணுவத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? இவ்வளவு காலமும் இதற்கான நீதி இந்த மண்ணிலே கிடைக்கவில்லை.
ஒவ்வொரு தடவையும் ஜெனிவாவில் பிரேரணை வருகின்ற வேளையில், ஜெனிவாவிற்கு அறிக்கை சமர்பிக்கப்படுகின்ற வேளையில் மட்டுமே இந்த விடயங்கள் பேசப்படுகின்றன.
2009 ஆம் ஆண்டில் சரணடைந்த இவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் இந்த நாட்டின் இளைஞர்களாக இருந்திருப்பார்கள். குடும்பம் குடும்பமாக இவர்கள் சரணடைந்தனர். அதற்கான சாட்சிகள், ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இன்னமும் நீதி கிடைக்கவில்லை.
நாட்டில் சட்டங்கள் குறித்து பேசுகின்றோம். நீதி பொறிமுறை பற்றி பேசுகின்றோம், சிறுவர்களின் உரிமைகள் குறித்து பேசுகின்றோம். ஆனால் இன்றும் 17 பெண்கள் குழந்தைகளுடன் சிறைகளில் உள்ளனர். அவர்களின் பிள்ளைகளை கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த உயரிய சபையில் நியாயம் சட்டம் பற்றி பேசிக் கொண்டு, கைது செய்யப்பட்ட நபர்களை சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதே ஏன்?
திருகோணமலையில் சிறுவன் ஒருவன் தன்னுடைய முகநூலில் பதிவிட்ட புகைப்படம் காரணமாக அவன் கைது செய்யப்பட்டு இன்றும் அவன் சிறையில் உள்ளான். இவ்வாறு பல குடும்பங்கள் கண்ணீருடன் உள்ளனர்.
இந்த கொவிட் காலத்தில் கடந்த மூன்று மாதங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 39 பேர் இரவிரவாக கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் கிளிநொச்சியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு உற்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமது பிள்ளைகளுக்காக, உறவினர்களுக்காக, மாவீரர்களுக்காக தமது எண்ணங்களை கண்ணீரை கர்பூரமாகவோ, மெழுகுவர்த்தியாகவோ ஏற்றி கும்பிட முடியாத நிலையில் இந்த நாட்டின் சட்டம் இயங்கிக் கொண்டுள்ளது.
தமிழர்கள் இந்த நாட்டில் எந்த நிலைமையில் உள்ளனர் என்பதை சர்வதேசம் விளங்கிக் கொள்ள வேண்டும். உயிரோடு ஒப்படைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு நீதி கிடைக்குமா? ஆகவே இந்த விவாதம் கௌரவமான நீதி கிடைக்கும் விதத்தில் அமைய வேண்டும் என அவர் சபையில் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment