2011 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தோல்வி தொடர்பான விசாரணைகள் குறித்து திருப்தியடையவில்லை - மஹிந்தானந்த அளுத்கமகே - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 5, 2021

2011 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தோல்வி தொடர்பான விசாரணைகள் குறித்து திருப்தியடையவில்லை - மஹிந்தானந்த அளுத்கமகே

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

2011 உலகக் கிண்ணக் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் தோல்விக்கு போட்டிக் காட்டிக் கொடுப்பே காரணம் என்று தான் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் குறித்து திருப்தியடையவில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பி கூறுகையில், 2011 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர், 9 வருடங்களின் பின்னர் இந்த போட்டியில் தோல்வியடைவதற்கு, போட்டிக் காட்டிக் கொடுப்பே காரணம் என்று கூறியிருந்தார். அவரின் அந்த கருத்து தொடர்பில் சர்வதேச ஊடகங்களின் ஊடாக வீரர்கள் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சின் பொலிஸ் பிரிவு மற்றும் ஐசீசீ என்பனவும் அந்த அமைச்சரிடம் கருத்துக்களை பெற்றன. இந்த விசாரணையை முன்னெடுக்க அரவிந்த சில்வா மற்றும் குமார் சங்கங்காரவிடவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இது அவர்களினதும், இலங்கை அணியினதும் பெயருக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் கருத்து என்றும் கூறியிருந்தனர். இவ்வாறான அமைச்சரின் கருத்துக்கள் தொடர்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டார்.

இதன்போது பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ கூறுகையில், எவருக்கேனும் சந்தேகம் இருந்தால் ஐசீசீக்கு முறையிட முடியும். அவர்கள் விசாரணைகளை முன்னெடுப்பர். அதன்படி யாருக்கும் ஊழல் மோசடி பிரிவுக்கோ, பொலிஸாரிடமோ முறையிட முடியும். ஒரு சில வீரர்கள் தொடர்பில் பிரச்சினை இருக்கலாம். ஆனால் முறையிடுபவர்கள் தொடர்பில் தண்டனை வழங்கினால் யாரும் முறையிட வரமாட்டார்கள் என்றார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறுகையில், உலகக் கிண்ணம் தொடர்பாக நான் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டன. அந்த விசாரணைகள் குறித்து நான் திருப்தியடையவில்லை. அந்த விசாரணையின் போது, அந்தக் காலப்பகுதியில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர், செயலாளரிடம் வாக்கு மூலங்கள் பெற்றுக் கொள்ளப்படவில்லை.

உலகக் கிண்ண முகாமையாளரிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்படவில்லை. நான் வீரர்கள் தொடர்புபட்டுள்ளதாக கூறவில்லை. ஆனால் வீரர்களை விசாரணைக்கு அழைத்து விசாரணையை திசை திருப்பியுள்ளனர்.

இது வீரர்களுடன் தொடர்புடையது அல்ல. அப்போது உலகக் கிண்ண அணியின் முகாமையாளராக இருந்த சுராஜ் ரன்தெனிய, செயலாளர் நிசாந்த ரணதுங்க, தலைவர் டீ.எஸ்.டி சில்வா இந்த குழுவினரிடம் வாக்கு மூலம் பெறுமாறு கூறினேன். ஆனால் இவர்களிடம் அதனை பெற்றுக் கொள்ளாது வீரர்களிடம் வாக்கு மூலம் பெற்றது போதுமானது அல்ல.

இதனால் இந்த விசாரணை தொடர்பில் நான் திருப்தியடையவில்லை. போட்டிக் காட்டிக் கொடுப்பு உள்ளூரிலும் நடக்கின்றது. இதனை நிறுத்தா விட்டால் எம்மால் ஒருபோதும் உலகக் கிண்ணத்தில் வெற்றியடைய முடியாது என்றார்.

No comments:

Post a Comment