(இராஜதுரை ஹஷான்)
நியூஸிலாந்தில் பல்பொருள் அங்காடியில் கத்திக் குத்து தாக்குதல் நடத்திய இலங்கை பிரஜை தொடர்பில் நியூஸிலாந்து அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணை நடவடிக்கைளுக்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். அடிப்படைவாத தாக்குதல்கள் எவ்வழியிலும் முன்னெடுக்கப்படலாம் என்பதை உலக நாடுகள் தற்போது அறிந்து கொண்டுள்ளன என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையிலேயே இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்து நீடித்துள்ளமையை பிற நாடுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக கருத வேண்டும். விடுதலை புலிகள் அமைப்பின் மீள் எழுச்சி அனைத்து நாடுகளின் நிலையியல் தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையும்.
அடிப்படைவாத தாக்குதல்கள் தென்னாசிய வலய நாடுகளில் மாத்திமல்ல முழு உலகிலும் தாக்கம் செலுத்தியுள்ளது. கடந்த வாரம் நியூஸிலாந்து நாட்டில் பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையர் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் நியூஸிலாந்து அரசாங்கம் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுக்கும் அனைத்து விசாரணை நடவடிக்கைகளுக்கும் இலங்கை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.
No comments:
Post a Comment