(எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பீ. விஜேசூரிய தெரிவித்தார்.
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருவது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் 200 பேரை நெருங்கி இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 95 வரை குறைந்திருக்கின்றது. இது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும்.
அத்துடன் நாடு முடக்கப்பட்டமை மற்றும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் காரணமாகவே இந்த பெறுபேறு கிடைத்திருக்கலாம் என்றே நம்புகின்றோம்.
ஆரம்பமாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு நாளாந்தம் கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்கள் 30 முதல் 40 வரையானவர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 10 க்கும் 15 க்கும் இடைவரை குறைந்திருக்கின்றது.
அதனால் குழந்தைகள் கொவிட் தொற்றுக்கு ஆளானால் அவர்களை வீடுகளில் வைத்துக் கொள்ளாமல் தாமதிக்காது வைத்தியசாலைக்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்களை கேட்டுக் கொள்கின்றேன்.
வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரும் சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் நாங்கள் திருப்பி அனுப்ப மாட்டோம். அதேபோன்று எமது வைத்தியசாலையில் சிறுவர்களுக்கு தேவையான மருந்து வகைகள் மற்றும் ஒக்சீஜன் தேவைப்பாடுகளில் எந்த தட்டுப்பாடும் இல்லை என்றார்.
No comments:
Post a Comment