தலைவி பட வெளியீட்டை முன்னிட்டு ஜெயலலிதா, எம்ஜிஆர், கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய கங்கனா ரனாவத் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 4, 2021

தலைவி பட வெளியீட்டை முன்னிட்டு ஜெயலலிதா, எம்ஜிஆர், கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய கங்கனா ரனாவத்

தலைவி திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு இந்தி நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இன்று (04) சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த அவர் மற்றும் படத்தின் இயக்குனர் ஏ.எல். விஜய் ஆகியோர் குறித்த நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

மதராசப்பட்டினம், தெய்வத் திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக தலைவி உருவாகி உள்ளது. இந்த படத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் பிரபல பொலிவூட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் தலைவி. இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத்தும், எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமியும் நடித்துள்ளனர்.

தலைவி படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை, எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு பல்வேறு தடைகளை கடந்து முதலமைச்சராவது வரை உள்ள காட்சிகள் இடம்பெற்று உள்ளது.

ஆர்.எம். வீரப்பனாக சமுத்திரக்கனி, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி கதாபாத்திரத்தில் மதுபாலா, சசிகலாவாக பூர்ணா ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தை விஜய் இயக்கி உள்ளார்.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை சுற்றி மேலும் சில படங்களும் வெப்சீரிஸ்களும் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பிள்ளையார் சுழி போட்டு மீண்டும் தமிழ் சினிமாவில் புதிய படங்களை தியேட்டர்களில் வெளியிட சினிமா துறையினர் முடிவு செய்துள்ளனர். வரும் வெள்ளி செப்டம்பர் 10ஆம் திகதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கங்கனா ரனாவத் நடித்துள்ள தலைவி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஜெயலலிதா பயோபிக் என்பதால் வெறும் ஜெயலலிதாவுக்கு மட்டும் மரியாதை செலுத்தி விடாமல், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த தமிழக முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களுக்கும் சென்று நடிகை கங்கனா ரனாவத் மரியாதை செலுத்தியுள்ளமை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

(திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது)

No comments:

Post a Comment