நான்கு வார கால முடக்கம் போதுமானது, சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும் என்கிறார் சுதர்சினி - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 14, 2021

நான்கு வார கால முடக்கம் போதுமானது, சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும் என்கிறார் சுதர்சினி

(ஆர்.யசி)

நாட்டில் வேகமாக பரவிக் கொண்டுள்ள டெல்டா வைரஸ் தொற்று காரணமாக எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. சுகாதார, வைத்திய அதிகாரிகளின் ஆலோசனை அறிக்கையும் கொவிட் செயலணிக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. இந்நிலையில் சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில், நான்கு வாரங்கள் நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவை வெளிப்படுத்தியுள்ளது. கொவிட் மரணங்களிலும் குறைவை காட்டுகின்றது.

யார் என்ன கூறினாலும் நாடு முடக்கப்பட்டதில் பாரிய சாதகத் தன்மைகள் வெளிப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை திறப்பதுடன் விரைவாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

கட்டுப்பாடுகளுடன் படிப்படியாக நாட்டை திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். கொவிட் செயலணிக் கூட்டத்தில் இது குறித்து ஆராயப்பட்டுள்ளது. சுகாதார வைத்திய தரப்பின் கோரிக்கைகளுக்கும் அமைய இறுக்கமான சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதில் உள்ள இறுக்கமான கட்டுப்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment