ஆப்கானிஸ்தானில் பெண்கள் விவகாரத்துறை அமைச்சகத்தின் பலகையை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக மத கோட்பாடுகளை வலியுறுத்தும் அமைப்பின் பலகையை தலிபான்கள் வைத்துள்ளனர். வெள்ளிக்கிழமை இந்த பெயர் பலகை மாற்றங்கள் நடந்திருக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளனர். 33 பேர் கொண்ட அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை.
தலிபான்கள் ஆட்சியை பிடித்ததால் ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமை கேள்விக்குறியாகி உள்ளது என்று பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
ஏற்கனவே ஆட்சியில் தலிபான்கள் இருந்தபோது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். பெண்கள் வேலைக்கு செல்வதை தடை செய்திருந்தனர். தற்போது அதுபோன்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று தலிபான்கள் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் அவர்கள் பெண்கள் மீதான பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் பெண்கள் விவகார அமைச்சரவை அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் வரக்கூடாது என்று திருப்பி அனுப்பி விட்டனர். இதேபோல பல இடங்களில் வேலைக்கு செல்லும் பெண்களை திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் மகளிர் நல அமைச்சகத்தை தலிபான்கள் கலைத்துள்ளனர். அந்த அமைச்சகத்துக்கு பிரார்த்தனை, வழிகாட்டுதல், நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் அமைச்சகம் என்று பெயரை மாற்றி உள்ளனர்.
இந்த அமைச்சகம் ஏற்கனவே 1996 முதல் 2001 வரை தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது செயல்பாட்டில் இருந்தது. இந்த அமைச்சகம் சார்பில் பெண்கள் கண்காணிக்கப்படுவார்கள். உறவினர்களுடன் செல்லாமல் தனியாக செல்லும் பெண்களுக்கு தண்டனை கொடுத்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் பெண்கள் போராடி பல அடிப்படை உரிமைகளைப் பெற்றுள்ளனர். தற்போது அதிகாரத்தைக் கைப்பாற்றி இருக்கும் தலிபான்களின் ஆட்சியில் தங்களின் உரிமைகள் பாதிக்கப்படுமோ என பெண்கள் அச்சத்தில் உள்ளனர். ஆப்கன் மாறி விட்டது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம் என உறுதியளித்தனர், ஆனால் கொள்கைகளுக்கும் வாக்குறுதிகளுக்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பதாகத் தோன்றுகிறது என பிபிசியின் முதன்மை சர்வதேச செய்தியாளர் லைஸ் டாசெட் கூறுகிறார்.
No comments:
Post a Comment