கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதியுடனான சந்திப்பில் எடுத்துக் கூறியதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதித் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை பிரதிநிதியான வைத்தியர் அலக்காங்சிங்கை இன்று சந்தித்து கலந்துரையாடிமை தொடர்பில் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை பிரதிதியான வைத்தியர் அலக்காங்சிங்கை சந்தித்து கலந்துரையாடினோம். இந்த சந்திப்பில் என்னுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.நாடு முடக்கப்பட்டுள்ள நிலையிலும் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் என்ற வகையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பிரதான கடமை. அதனால் அவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் விடயத்தில் முன்னுரிமை வழங்க வேண்டியதன் தேவை தொடர்பாக எடுத்துக் கூறினோம்.
குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் விரைவாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்பதை நாங்கள் எடுத்துக் கூறியதை உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி ஏற்றுக் கொண்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக எமக்கு உத்தரவாதம் வழங்கினார்.
அத்துடன் கொவிட் தொற்று இன்னும் எவ்வளவு காலத்துக்கு தொடரும் என யாருக்கும் தெரியாது. வைரஸ் பலவையான திரிபுகளாக மாறி வருகின்றது. அதனால் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு கொவிட் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான வழிகாட்டல் ஒன்றை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மலையகத்தில் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் முன்வைத்தோம். அது தொடர்பாக கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதற்கும் இதன்போது இனக்கம் தெரிவிக்கப்பட்டது என்றார்.
No comments:
Post a Comment