இலங்கையின் பொருளாதாரம் பற்றிய கவலைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் வளங்களை பயன்படுத்துவதே சிறந்த தீர்வுக்கான ஒரு அங்கமாக இருக்கும் என தான் நம்புவதாக அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில், அண்மையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் சிறப்பான கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தேன். மிகவும் சுமுகமான இரு தரப்பு கலந்துரையாடலாக அது அமைந்திருந்தது. முதலீடுகள் பற்றி பேசுவதற்கு எமக்கு சிறந்த சந்தர்ப்பமொன்று கிடைத்திருந்தது.
குறிப்பாக முதலீடுகள் குறித்து இதன் போது கூடிய கவனம் செலுத்தப்பட்டது. முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், வரையறைகள் மற்றும் வெளிப்படையானதுமான சூழல் அவசியமாகின்றது.
இலங்கை உயர்தரத்திலான முதலீட்டளர்களை ஈர்ப்பதை காண விரும்புகின்றோம். இந்த அபிப்பிராயத்தை நிதியமைச்சரிடமும் தெரிவித்தேன்.
இலங்கையின் பொருளாதாரம் பற்றிய கவலைகள் தொடர்பில் பகிரங்கமாக தெரிவித்த விடயங்களை பகிர்ந்து கொண்டேன். அது தற்போதைய தருணத்தில் சிறந்த ஆரோக்கியமான நிலையில் இல்லை.
தற்போதைய கொவிட் பெருந்தொற்று நிலைமை காரணமாக உலகளாவிய ரீதியிலும் இது மிகவும் கடினமான காலமாகும். ஆகவே, சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட வளங்களை பயன்படுத்துவதே இலங்கைக்கு தீர்வுக்கான ஒரு அங்கமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பு நாடொன்றாகும். இலங்கையும் ஏனைய 188 நாடுகளும் அந்த அங்கத்துவம் கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியமானது, வறுமைக்கு எதிராக போராடுவதற்கும் உலகளாவிய நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் மற்றும் உலகளாவிய வேலை வாய்ப்பு தேவைகளை தீர்க்க உதவுவதற்குமே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த தருணத்தில் இலங்கைக்கு தேவையான மிகச் சரியான கருவி இதுதான் என்று நான் கருதுகிறேன். உறுப்பு நாடென்ற வகையில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் வளங்களை அதிகப்பட்ச நன்மைகளை பெற பயன்படுத்தப்பட வேணடும்.
இலங்கையின் பொருளாதார செயலாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கு வருகை தரக்கூடிய கருவிகளில் இருந்து பயனை பெற்றுக் கொள்ளுமாறும் உறுதியான முன்னோக்கிய பொருளாதார அடித்தளமொன்றை ஏற்படுத்தும் மாற்றங்களில் எவ்வாறு ஈடுபடுவது என்பது பற்றி நிச்சயம் சிந்திக்குமாறும் அரசாங்கத்தை தொடர்ந்தும் வலியுறுத்துகிறேன்.
No comments:
Post a Comment