(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றுக்குள்ளாகி தீவிர நிலைமையை அடைந்து பின்னர் குணமடைந்தவர்களில் 10 - 15 சதவீதமானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படக்கூடும். எனினும் இதனை உரிய மருத்துவ ஆலோசனைகளுடன் தொடர்ச்சியாக மருந்துகளை உற்கொள்வதன் மூலம் குணப்படுத்த முடியும் என்று ஹோமாகம மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளில் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் துஷார கலபட தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்கள் இரு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றனர்.
இவர்களில் ஒரு தரப்பினர் தீவிர நிலைமையை அடையக் கூடியவர்களாகவும், ஏனையோர் அறிகுறிகள் அற்ற வீடுகளிலேயே சிகிச்சைப்பெறக்கூடிய நிலைமையிலும் உள்ளவர்களாவர்.
இந்த இரு தரப்பினர்களும் தீவிர நிலைமையை அடைந்து பின்னர் குணமடைந்தவர்களில் 10 - 15 வீதமானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.
அத்தோடு மேலும் சிலருக்கு சுவாசிப்பதில் சிக்கல், உடற் சோர்வு, பலமின்மை , இருமள், சுவை தெரியாமை உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படக் கூடும்.
குறிப்பிட்ட சிலருக்கு மன உளைச்சல் கூட ஏற்படக் கூடும். எவ்வாறிருப்பிம் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுபவர்கள் வீண் அச்சம் கொள்ளத்தேவையில்லை. இவற்றை உரிய மருத்துவ ஆலோசனைகளின் மூலம் தொடர்ச்சியாக மருந்துகளை உட்கொண்டு குணப்படுத்த முடியும் என்றார்.
No comments:
Post a Comment