ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் அதிருப்தி - News View

About Us

About Us

Breaking

Friday, September 17, 2021

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் அதிருப்தி

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் அறிக்கை தொடர்பில் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திடம் வாய்மொழி மூலமாகத் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகள் இது குறித்து விரைவில் ஆணையாளருக்கு எழுத்து மூலமான கடிதமொன்றை அனுப்பி வைக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், அன்றைய தினம் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கை வாசிக்கப்பட்டது.

அதில் கிளிநொச்சியில் ஆறாவது கிளை அலுவலகத்துடன் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் அதன் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டிய ஆணையாளர், அலுவலகத்தின் செயற்பாடுகளின் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பாதிக்கப்பட்டவர்களை முன்நிறுத்திய மனிதாபிமான அணுகுமுறைகளின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியிருந்தார்.

எனினும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டுக்குக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அக்கடிதத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தை வலிந்து காணாமலாக்குவதற்கான முயற்சிகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டிருந்த அச்சங்கத்தின் பிரதிநிதிகள், இனியேனும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தம்மீது வலுகட்டாயமாகத் திணிக்கப்படுவதிலிருந்து தம்மை விடுவித்து சர்வதேச விசாரணையுடனான நீதிச் செயன்முறையொன்றைப் பரிந்துரை செய்வதனூடாகத் தமக்கு நீதியை வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய் மூல அறிக்கை திருப்தியளிக்கின்றதா? என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதியொருவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் நம்பிக்கை கொள்ள முடியாது என்று ஏற்கனவே நாம் ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தோம். அவ்வாறு நாம் கூறுவதற்கான காரணங்களையும் அதற்கான ஆதாரங்களையும் அக்கடிதத்துடன் இணைந்திருந்தோம்.

அவ்வாறிருப்பினும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் கிளையொன்று கிளிநொச்சியிலும் திறக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருப்பதன் ஊடாக அவ்வலுவலகத்தின் மீதான நம்பிக்கையை ஆணையாளர் மறைமுகமாக வெளிப்படுத்தியிருக்கின்றார். இது குறித்து நாம் மிகவும் கவலையடைகின்றோம்' என்று அப்பிரதிநிதி குறிப்பிட்டார்.

அத்தோடு ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் அறிக்கை குறித்த தமது அதிருப்தியை கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு வாய் மூலமாகத் தெரியப்படுத்தியிருப்பதாகக் கூறிய அப்பிரதிநிதி, இது பற்றி விரைவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுத்து மூலம் கடிதமொன்றை அனுப்பிவைக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கேசரி

No comments:

Post a Comment