கொழும்பு லங்கா ஹொஸ்பிடல்ஸ் வைத்தியசாலையில் கைக்குண்டை வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த வாரம் (14) கொழும்பு லங்கா வைத்தியசாலையில் மீட்கப்பட்ட கைக்குண்டுடன் திருகோணமலை, உப்புவெளியைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் CCD யினால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில் வாக்குமூலத்தில் மற்றுமொரு சந்தேகநபர் திருகோணமலையில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் கன்னியா விளாங்குளம், பீலியடி பகுதியை சேர்ந்த 24 வயதான ஒருவர் எனவும் தெரியவருகின்றது.
கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபரை கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை (17) மஹவ பிரதேசத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு அமைய, இதுவரை இச்சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ரொட்டவெவ நிருபர்)
No comments:
Post a Comment