(எம்.ஆர்.எம்.வசீம்)
தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக கொழும்பு மாநகர எல்லை பிரதேசத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உலர் உணவு பொதி வழங்குவதற்காக மாநகர சபையினால் பிரேரணை ஒன்றை அனுமதி கேட்டிருந்தபோதும் மாநகர ஆணையாளர் அதற்கு அனுமதி வழங்காமைக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று (27) மாநகர ஆளும் கட்சி உறுப்பினர்கள் மாநகர வளாகத்தில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த எதிர்ப்பு போராட்டத்தில் மாநகர சபை மேயர் ரோசி சேனாநாயக்கவும் கலந்துகொண்டிருந்ததுடன், சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ரம்சி டோனியும் கலந்துகொண்டிருந்தார்.
நாட்டுக்குள் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணமாக, அவர்களுக்கு சதொச நிறுவனம் ஊடாக 4 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதியொன்றை பெற்றுக் கொடுப்பதற்கு மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை செயற்படுத்துவதற்கு மாநகர ஆணையாளர் உட்பட அதிகாரிகள் அனுமதிக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் மாநகர ஆணையாளர் மேயரின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளார். இது தொடர்பில் கவனம் செலுத்தி நியாயமாக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து மேல் மாகாண ஆளுநரிடமும் கேட்டுக் கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் மேயர் ரோசி சேனாநாயக்க குறிப்பிடுகையில், மாநாகர எல்லையில் வாழ்பவர்களில் அதிகமானவர்கள் நாளாந்தம் வருமானம் ஈட்டிக்கொள்ளும் மக்களாகும். ஒரு மாதத்துக்கும் அதிக காலம் பயணக் கட்டுப்பாடு இருந்து வருகின்றது. அதனால் அவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அதனால் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு உலர் உணவு பொதியொன்றை வழங்குவதற்கு நாங்கள் விசேட நிதி செயற்குழுவில் கோரி இருந்தோம்.
அத்துடன் மாநகர சபை மாதாந்த அமர்விலும் அதற்கான அனுமதியை பெற்றுக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது அதனை வழங்க முடியாத வகையில் அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றனர். இதனை மேற்கொள்ள முடியாது என காரணங்களை தெரிவிக்கின்றனர். அவர்கள் தெரிவிக்கும் காரணங்கள் எதுவும் சட்டபூர்வமானதல்ல என்றார்
No comments:
Post a Comment