நாளை மோதும் சென்னை சுப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 18, 2021

நாளை மோதும் சென்னை சுப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாளை நடைபெறும் ஐ.பிஎல்.தொடரின் 30 ஆவது லீக் போட்டியில் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்தாடவுள்ளது. இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

14 ஆவது ஐ.பி.எல் டி 20 கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமானது. எனினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே மாதம் 2 ஆம் திகதியன்று 29 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் ஐ.பி.எல். போட்டித் தொடர் பிற்போடப்பட்டது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து காணப்படுவதாலும் உலக இருபதுக்கு 20 கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளதாலும் எஞ்சியப் போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றிக் கொண்டது.

14 ஆவது ஐ.பி.எல். அத்தியாயத்தில் இரண்டாவது கட்டப் போட்டிகள் நாளை (19) முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது. எஞ்சிய 27 லீக் போட்டிகள் அடங்கலாக 4 பிளே ஓப் போட்டிகள் என மொத்ததமாக 31 போட்டிகள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.

துபாயில் 13 போட்டிகளும் , சார்ஜாவில் 10 போட்டிகளும், அபுதாபியில் 8 போட்டிகளும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளன. ஒக்டோபர் 8 ஆம் திகதியுடன் லீக் போட்டிகள் நிறைவடைகிறது.

முதல் தகுதிகாண் போட்டி ஒக்டோபர் 10 ஆம் திகதியன்றும், வெளியேறும் போட்டி 11 ஆம் திகதியன்றும் இரண்டாவது தகுதிகாண் போட்டி 13 ஆம் திகதியன்றும் நடைபெறவுள்ளன. வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஒக்டோபர் 15 ஆம் திகதியன்று துபாயில் நடைபெறும்.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் நிறைவில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகியன 10 புள்ளிகளுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை வகிக்கின்றன. நடப்புச் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் (6 புள்ளிகள்), பஞ்சாப் கிங்ஸ் (6 புள்ளிகள்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (4 புள்ளிகள்), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (2 புள்ளிகள்) ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணத்தால் பல ‍வெளிநாட்டு வீரர்கள் விலகிக்கொண்டதால் புதிதாக வெளிநாட்டு வீரர்கள் சிலர் ஒவ்வொரு அணிகளிலும் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

அந்த வகையில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இலங்கையின் வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் விளையாடவுள்ளனர்.

இம்முறை ஐ.பி.எல். இல் இலங்கை வீரர்கள் ஒருவரும் இல்லாத நிலையில் இவ்விருவரும் பெங்களூர் அணிக்காக விளையாடவுள்ளமை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்.

No comments:

Post a Comment