யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 18, 2021

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை வழங்கும் ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கை நெறி நேற்று (17) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சி. ரகுராம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைப்பீடப் பீடாதிபதி கலாநிதி க. சுதாகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நிகழ்நிலைத் தொழில்நுட்பம் வழியாக நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊடகக் கற்கைகள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பல்கலைக்கழகம் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடைமைகளில் ஒன்றாக, துறைசார் ஆர்வமிருந்தும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகத் தவறிய மாணவர்களுக்கும், தொழில்சார் ஊடகவியலாளர்களாகப் பணியாற்றுவோருக்கும் பல்கலைக்கழகக் கல்வி மூலம் உரிய தகைமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக இந்த ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பிக்கப்படுவதாக துணைவேந்தர் பேராசிரியர்சி. சிறிசற்குணராஜா ஆரம்ப நிகழ்வில் தெரிவித்தார்.

இரண்டு வருட பகுதி நேரக் கற்கையாக ஆரம்பிக்கப்படும் உயர் டிப்ளோமா கற்கை நெறி துறைசார் விரிவுரையாளர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், ஊடக ஆய்வாளர்கள் ஆகியோரின் கல்விசார் பங்களிப்புடன் சுயநிதிக் கற்கையாக முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வெளிநாட்டு நிதியுதவியுடன் ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்தின் வழியாக ஊடகவியலாளர்களுக்காக சில வருடங்களுக்கு முன்னர் மேற்கொண்ட இதழியல் டிப்ளோமா கற்கை நெறியினைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத் துறைசார் முன்னெடுப்புடன் இந்த ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி ஆரம்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment