(எம்.எப்.எம்.பஸீர்)
குடிபோதையில், நண்பர்கள் சிலருடன் வெலிக்கடை சிறைச்சாலை தலைமையகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த அதிகாரிகள் சிலரை தகாத வார்த்தைகள் கொண்டு ஏசியதாக கூறப்படும் விடயம் தொடர்பில், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிராக முறையிட, சிறை அதிகாரிகள் சிலர் தீர்மானித்துள்ளனர்.
கடந்த 6 ஆம் திகதி, நடக்கக்கூட முடியாத நிலையில் போதையில் தள்ளாடிய வண்ணம், இராஜாங்க அமைச்சரும் அவரது கூட்டாலிகளும் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்துக்குள் சென்றுள்ளனர்.
சிறைச்சாலையை காண்பிக்கவே நண்பர்களுடன் இராஜாங்க அமைச்சர் அங்கு வந்துள்ளதாக அவரது நடவடிக்கைகளில் தெரிந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறினர்.
குடிபோதையில் வந்த இராஜாங்க அமைச்சரின் குழுவினரை தடுக்க முயன்ற சிறை அதிகாரிகளை இராஜாங்க அமைச்சர் ஏசியதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சிரேஷ்ட சிறைச்சாலை அதிகாரி ஒருவர், சம்பவத்தை உறுதி செய்ததுடன், அது தொடர்பில் மேலதிகமாக எதனையும் குறிப்பிட முடியாது என தெரிவித்தார்.
No comments:
Post a Comment