கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையின் கழிவறையிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டி பொலிஸார், கொழும்பு தெற்கு குற்ற விசாரணை பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், திருகோணமலை உப்பு வெளியை சேர்ந்த 26 வயதானவராவார். வைத்தியசாலையிலிருந்து பணப் பரிசில் பெறும் நோக்கில் இவ்வாறு குண்டை வைத்துவிட்டு, அது தொடர்பில் தகவல் அளித்துள்ளதாக விசாரணைகளில் குறிப்பிட்டதாக பொலிஸார் கூறினர்.
சந்தேக நபரே குண்டு தொடர்பில் முதல் தகவலை அளித்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், முன்னெடுத்த விசாரணைகளில் அவரே குண்டை குறித்த இடத்துக்கு எடுத்து வந்தமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
நிர்மாண நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிறுவனம் ஒன்றின் ஊழியரான சந்தேக நபர், வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் நிர்மாண பணிகளுக்காக அங்கு கடந்த 12 நாட்களுக்கு முன்னர் வேலைக்கு வந்தவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடும் கடன் சுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சந்தேக நபர், பணம் பெறும் நோக்கில் நாடகமாடியதாக குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment