(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அடிப்படை சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் மாத்திரமே கொவிட் அபாயத்திலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என்று சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு அத்தியாவசிய தேவைகளை கருத்திற் கொண்டு தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அநாவசிய ஒன்று கூடல்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்கு வரத்து கட்டுப்பாடுகள் தளர்வின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளன. அதற்கமைய எதிர்வரும் சில நாட்களுக்கும் நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு அதிகரிப்பை அவதானிக்க முடியும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
மேலும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் கொவிட் மரண இறுதி சடங்கு தொடர்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் எவ்வித மாற்றமும் கிடையாது. அதற்கமையவே இறுதி சடங்குகள் இடம்பெறும்.
இதே போன்று திருமண நிகழ்வுகளிலும் சமூக இடைவெளியைப் பேணுமளவில் குறைந்தளவானோர் மாத்திரமே பங்குபற்ற வேண்டும் என்றும் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment