யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று சற்று தீவிரமடைந்த நிலை காணப்படுகின்ற அதே வேளை இறப்புகளும் அதிகரித்து செல்கின்ற போக்கு காணப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள நிலையில் அரசாங்கம் அறிவித்திருக்கின்ற புதிய சுகாதார விதிமுறைகளை மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் சுகாதாரத் திணைக்களம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து செயற்படுத்தப்படுகின்றன.
அந்த வகையிலே யாழ் மாவட்ட செயலகத்தினுடைய சேவை வழங்குதல் பற்றியும் ஆய்வு செய்து தற்காலிகமாக சில கட்டுப்பாடுகளை அந்த சேவை வழங்குவதில் செய்திருக்கின்றோம். ஏனென்றால் தற்பொழுது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பணியாளர்களை சேவைக்கு அழைத்து இருக்கின்றோம்.
அதே நேரத்தில் மக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தடுக்கின்ற செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது. குறிப்பாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அதேபோல கொன்சியூலர் பிரிவு மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்கள நடவடிக்கைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே செயற்படுத்தப்படுகின்றது.\
இந்நிலையில் மோட்டார் போக்கு வரத்து திணைக்களம் தன்னுடைய நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தி அதனை மீள ஒரு ஒழுங்கு முறையில் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பிற்பாடு ஆரம்பிக்கக் கூடிய செயற்பாட்டை முன்னெடுத்திருக்கின்றோம்.
எனவே பொதுமக்கள் மிகவும் அத்தியாவசிய நோக்கங்களுக்காக மாத்திரமே மாவட்ட செயலகத்திற்கு வருகை தர வேண்டும் எனினும் தற்போதுள்ள சூழ்நிலையில் இன்றும் நாளையும் இந்த கிளைகளை மூடி சேவைகளை நிறுத்தியுள்ளோம்.
எனவே எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து குறிப்பிட்ட திணைக்களங்களுக்குரிய சேவைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் செயற்படுத்தப்படும் அதேபோல் மோட்டார் திணைக்களத்தின் எழுத்துப் பரீட்சை மற்றும் பிரயோக ஓட்டப்பயிற்சி என்பன தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்த மோட்டார் திணைக்களத்திற்கு பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதன் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மோட்டார் போக்கு வரத்து பிரிவினை தொடர்பு கொள்வதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அந்த பதிவின் ஊடாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் ஏற்கனவே மோட்டார் திணைக்களம் அறிவித்துள்ள புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அவதியுராது மிக மிக அத்தியாவசிய தேவைகளை மாத்திரம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் தற்போதுள்ள சூழ் நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன அத்தியாவசிய போக்கு வரத்து அனுமதி வழமைபோல வழங்கப்பட்டு வருகின்றது. அவற்றை துஸ்பிரயோகம் செய்யாது அவற்றை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதேபோல் அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் எரிவாயு சீனி போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக அறிகின்றோம் பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் களப் பரிசோதனை செய்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகவே பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வண்ணம் பொருட்களை பாதுகாத்து பங்கீட்டு அடிப்படையில் அவற்றை வழங்கி உதவுமாறு சகல வர்த்தக சமூகத்தினையும் கேட்டுக் கொள்கின்றோம்.
அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்குரிய போக்கு வரத்து எந்தவிதத் தடையுமின்றி நடைபெறுவதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் மிக மிக அவசிய தேவைகளற்ற பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாட்டினை மூன்று வாரங்களுக்கு நாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளது.
மக்களை பாதுகாப்பதற்காகவே இந்த நடைமுறைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது அத்தோடு பொதுமக்களும் சமூக பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டிய காலமாக இது காணப்படுகின்றது.
தற்பொழுது வைத்தியசாலைகளில் கூட இட நெருக்கடி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் உணர்ந்து தமது செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக தற்போது புதிய வழிகாட்டலின் படி வழிபாட்டிடங்களில் ஒன்று கூடுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனைய குடும்ப நிகழ்வுகள் திருமண நிகழ்வுகள் போன்றவையும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கட்டுப்பாட்டுடன் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே புதிய சுகாதார நடைமுறையினை பொதுமக்கள் பின்பற்றி வீடுகளிலிருந்து தேவையில்லாது வெளியேறுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment