கொவிட்19 தொற்று பரவல் காரணமாக ஹார்ட்வெயார் தொழில்துறை பாரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், நெருக்கடி நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக The Ceylon Hardware Merchants’ Association (இலங்கை ஹார்ட் வெயார் வணிகர் சங்கம்) தலைவர் எஸ்.டி.எஸ்.அருளானந்தன் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருட காலமாக கொவிட்19 தொற்றால் முழு உலகமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஒட்டு மொத்த வணிகச் செயற்பாடுகளும் தடைப்பட்டுள்ளன. இது இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதொரு விடயமல்ல.
இலங்கையில் கொவிட்19 தொற்று ஆரம்பமான காலம் முதல் ஹார்ட்வெயார் தொழில் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழில்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
குறிப்பாக கட்டட நிர்ணமானத்துறை கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. இத்துறை புத்துயிர் பெரும் வரை ஹார்ட்வெயார் தொழில்துறை புத்துயிர் பெறாது.
நாட்டு மக்களின் முதல் தேவையாக உணவுதான் தற்போது உள்ளது. அதற்கே அனைவரும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதனால் எமது தொழில் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மக்கள் மீது இதற்காக நாம் குறைகூற முடியாது.
அரசாங்கமும் நெருக்கடியான நிலையில்தான் உள்ளது. அவர்களிடம் உதவிகளை கோர முடியாதுள்ளது.
கொழும்பிலுள்ள ஒவ்வொரு ஹார்ட்வெயார்களிலும் குறைந்தது 20 முதல் 30 பணியாளர்கள் உள்ளனர். அதேபோன்று தினக் கூலிக்கு பணிபுரியும் தொழிலாளர்களும் இதனைச் சார்த்துள்ளனர். இவர்களுக்கு சம்பளத்தை வழங்க வேண்டியுள்ளது. எமது தொழிலாளர்களுக்கு நாம் எவ்வித சம்பள குறைப்பையும் மேற்கொள்ளாது இன்று வரை செயற்பட்டு வருகிறோம்.
மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக நேரம் பணிபுரிகின்றமைக்கான கொடுப்பனவுகள் மாத்திரமே வழங்கப்படுவதில்லை. சம்பளம் 100 சதவீதம் வழங்கப்படுகிறது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நாடு திறக்கப்பட்டிருந்த போதிலும் ஹார்ட்வெயார் தொழில்துறை மாத்திரம் 75 நாட்களுக்கு தொடர்ந்தும் முடக்கப்பட்டிருந்தது.
பெரும் நெருக்கடியான சூழ்நிலையில்தான் எமது தொழில் நகர்கிறது என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment