தனிமைப்படுத்தல் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளில் ஈடுபட்ட பெண் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 20, 2021

தனிமைப்படுத்தல் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளில் ஈடுபட்ட பெண் கைது

(எம்.மனோசித்ரா)

சவுதி அரேபியாவிற்குச் சென்று நாடு திரும்பிய பெண்ணொருவர், தனிமைப்படுத்தல் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் அவர் போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி கடந்த 2019 இல் சவுதிக்குச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பெண்களைத் தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையமொன்று வேயங்கொட பொலிஸ் பிரிவில் - நைவல பிரதேசத்தில் அமைந்துள்ளது. 

நைவல தொழிநுட்ப வித்தியாலத்திற்கு அருகில் அமைந்துள்ள குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணொருவர் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், அவரால் குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்திலுள்ள ஏனைய பெண்களின் தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும் அங்கிருந்த அதிகாரிகளால் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய வேயங்கொட பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய குறித்த பெண் 2019 பெப்ரவரி 6 ஆம் திகதி அஸ்மா உம்மா என்ற போலிப் பெயரில் சவுதி அரேபியாவிற்கு சென்று நாடு திரும்பியவர் என்பது தெரியவந்துள்ளது. குறித்த பெண் தவறான முறையில் போலியான அடையாள அட்டையைக் காண்பித்து இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளார்.

முல்லைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ரம்சானியா என்ற பெண்னே இவ்வாறு போலியான அடையாள அட்டை ஊடாக வெளிநாடு சென்றுள்ளார். 

நேற்று திங்கட்கிழமையுடன் குறித்த பெண்ணின் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததையடுத்து, அவர் வேயங்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த ஏனைய பெண்கள் தொடர்பான தகவல்கள் இவரால் எதற்காக சேகரிக்கப்பட்டன என்பது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. வேயங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment