சாய்ந்தமருது பிரதேசத்தில் புதிதாக பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
பொதுமக்களின் இலகு தன்மையை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் 197 புதிய பொலிஸ் நிலையங்களை ஸ்தாபிக்கும் வகையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான விசேட திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால், அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருதில் புதிய பொலிஸ் நிலையம் அமைக்கபட்டு உத்தியோபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமை (23) திறந்து வைக்கப்பட்டது
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி. ஜெய்ந்த ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி எல்.கே. டபிள்யூ. கமால் சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.
இதில் கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் என்.வை. செனவிரத்ன, கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்ச்சகர் பீ.எம். ஜெயரத்ன, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச். சுஜித் பிரியந்த, கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.சி. அன்சார், சாய்ந்தமருது பிரதேச செயலாளர். ஏ.ஏ. ஆசிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதகாரி எஸ்.எல். சம்சுதீன் மதத்தலைவர்கள்,பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இதன் போது பொலிஸ் நிலையத்தில் மர நடுகை இடம்பெற்றதுடன்,பொலிஸ் சேவையில் நீண்ட கால அனுபவம் கொண்டவரும் கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்துக்கான பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுகாதார மத்திய நிலையத்துக்கு அருகாமையில், அல்ஜலால் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக குறித்த பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
(எம். என். எம். அப்ராஸ், யூ. கே. காலித்தீன்)
No comments:
Post a Comment