பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
நாட்டில் பல களவுகள் இடம்பெற்று கொண்டுதான் இருக்கின்றது. வெளிநாட்டிலுள்ள கறுப்புப் பணத்தை நாட்டிற்குள் கொண்டு வருவது சட்டமாக்கப்படுகின்றது. புதிய நிதியமைச்சர் இதனை மேற்கொள்கின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - அம்பாரை மாவட்ட மீனவர்களின் படகுகளிலிருந்து ஆழ்கடலில் வைத்து களவாடப்படும் மீன்கள், சுறுக்குவலைகள் தொடர்பில் இன்று (23) மாளிகைக்காடு அந்நூர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மீனவர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், எங்களுடைய மீன்களை களவெடுக்காதீர்கள் என்றுதான் கூறுகின்றோம். களவெடுக்க வேண்டாமெனக் கூறுவதென்பது குற்றமா? எனக் கேட்க விரும்புகின்றேன்.
நாட்டில் பல களவுகள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. ஒரு சட்டமொன்று நாடாளுமன்றத்திலே நேற்று முந்தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதிச்சட்டத்தைத் திருத்துவதற்கான ஒரு சட்டமூலமாகும். அதாவது, வெளிநாட்டிலுள்ள கறுப்புப் பணத்தை நாட்டிற்குள் கொண்டு வருவது சட்டமாக்கப்படுகின்றது என்பதாகும்.
புதிதாக வந்திருக்கின்ற நிதியமைச்சர் எடுத்திருக்கின்ற முதலாவது நடவடிக்கை இது. யார் கறுப்புப் பணத்தைக் கொண்டு வரப்போகின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இவ்விடயத்தை சவாலுக்குட்படுத்த பல மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். கறுப்புப் பணத்தினை வெள்ளயடிக்கும் பொறிமுறையும் மேற்கொள்ளப்படுகின்றது எனக்குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment