மீண்டும் முருங்கை மரத்தில் வேதாளம் : ஞானசார தேரர் தொடர்பில் ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அரசு கவனத்தில் கொள்வது சிறந்தது - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

மீண்டும் முருங்கை மரத்தில் வேதாளம் : ஞானசார தேரர் தொடர்பில் ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அரசு கவனத்தில் கொள்வது சிறந்தது

“வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிக்­கொண்­ட­து”­ என்ற கதையொன்­றினை நாம் கேள்­விப்­பட்­டி­ருக்­கின்றோம். இக்­க­தையை சில சந்­தர்ப்­பங்­களில் ஞாப­கப்­ப­டுத்த வேண்­டி­யேற்­ப­டு­கி­றது.

எமது நாட்டில் இன­வாத நோக்­குடன் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பொது­பலசேனா அமைப்பின் செயற்­பா­டு­களை நோக்­கும்­போது வேதாளமும் முருங்கை மர­முமே எமக்கு ஞாபகத்திற்கு வரு­கி­றது.

கடந்த காலங்­களில் நல்­லாட்சி அர­சாங்­கத்­தின்­ஆட்­சிக்­ கா­லத்­திலும், அதற்கு முன்பு மஹிந்த ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலத்திலும் மிக வேக­மாக செயற்­பட்டு நாட்டில் இன­வாத விதைகளை விதைத்து வந்த பொது­பலசேனா அமைப்பு நீண்­ட­கால மெள­னத்தின் பின்பு மீண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. 

சில தினங்­க­ளுக்கு முன்பு பொது­பலசேனா அமைப்பின் பொதுச்செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் ஊடக மாநாடொன்­றினை நடத்­தினார்.

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம்
“இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் தற்­போது நாட்டில் வேரூன்­றி­யுள்­ளது. இஸ்­லாத்தின் பெயரால் கடந்த காலங்­களில் நாட்டில் மேலோங்­கிய வஹாபிச கொள்­கைகள், அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் இன்னும் முழு­மை­யாக முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. எந்­த­வொரு தரப்­பி­ன­ராலும் வெளிப்­ப­டை­யாக இனங்­கண்டு கொள்ள முடி­யாத பல்­வேறு கோணங்­களில் அவை தொடர்ந்தும், முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன” என ஞான­சார தேரர் தெரி­வித்­துள்ளார்.

சிந்­தனை ரீதி­யான ஜிஹாத், பொரு­ளா­தார ரீதி­யான ஜிஹாத் என்­பன அரச நிறு­வ­னங்­க­ளுக்குள் புகுந்­துள்­ளன. எனவே நாம் விழிப்படைய வேண்­டிய சூழல் ஏற்­பட்­டுள்­ளது.

நாட­ளா­விய ரீதியில் பாரம்­ப­ரிய, சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள் எங்­களை ஆத­ரிக்­கின்­றார்கள். அவர்­களின் கோரிக்­கைக்கு அமை­யவே நாம் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டினை நடத்தி இந்­நி­லை­மை­யினை விளக்குகிறோம். 

இலங்­கையில் வியா­பித்­து­ வரும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத செயற்பா­டுகள் தொடர்பில் நாம் கடந்த காலங்­களில் பல்­வேறு தகவல்­களை அம்­ப­லப்­ப­டுத்­தி­யி­ருந்தோம். அந்த செயற்­பா­டுகள் தற்போது மேலும் வலு­வ­டைந்து வரு­கி­றது. 

2015 ஆண்டில் ஆட்சி பீட­மே­றிய நல்­லாட்சி அர­சாங்­கத்­தின் கீழ், ஒரு சில அர­சியல் தலை­மை­களின் ஒத்­து­ழைப்­புடன் நாட்டில் முன்னெடுக்­கப்­பட்டு வந்த மத தீவி­ர­வாத மற்றும் அடிப்­ப­டை­வாத இஸ்­லா­மிய நட­வ­டிக்­கைகள் பற்றி சுட்­டிக்­காட்­டினோம். இந்த இஸ்லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கும் நாட்டின் தே­சிய பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கும் புதிய தலைமைத்து­வ­மொன்று அவ­சியம் என வலி­யு­றுத்­தினோம்.

2019 ஆம் ஆண்டில் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் பாரிய நம்பிக்­கை­யுடன் புதிய ஜனா­தி­ப­தி­யொ­ரு­வரைத் தெரிவு செய்தோம். தேர்­தலில் பெரும்­பான்மை சிங்­க­ள­வர்­களின் வாக்கின் மூலம் தெரிவான ஜனா­தி­பதி இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை நாட்டிலிருந்து இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு தலை­மைத்­துவம் வழங்­குவார் என எதிர்­பார்த்தோம். நாட்டு மக்­களின் நிலைப்­பாடும் இது­வா­கவே இருந்­தது. 

புதிய தலை­மைத்­து­வத்தின் கீழ் இத்­த­கைய சில செயற்­பா­டுகள் மட்டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பினும் வேறு வழி­களில் இஸ்­லா­மிய அடிப்படை­வாத செயற்­பா­டுகள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தின் ‘ஜிஹாத்’ கொள்கை­யா­னது பொரு­ளா­தாரம் உள்­ளிட்ட பல்­வேறு துறை­களை மையப்­ப­டுத்­தி­ய­தாக உள்­ளது என்றும் ஞான­சா­ர­தேரர் கருத்து வெளி­யிட்­டுள்ளார்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம்
ஞான­சா­ர­தேரர் கடந்த காலங்­க­ளிலும் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்­டத்தை கடு­மை­யாக விமர்­சித்து வந்­தி­ருந்தார். மீண்டும் அந்த நிலைப்­பாட்­டுக்கு புத்­துயிர் கொடுத்­துள்ளார். 

முஸ்லிம்கள் சிங்­கள யுவ­தி­களை இஸ்­லாத்­துக்கு மதம் மாற்றி திருமணம் செய்து கொள்­கி­றார்கள். பின்பு அவர்­களை காதி நீதிமன்றம் ஊடாக இல­குவில் விவா­க­ரத்து செய்து கொள்­கின்­றனர். காதி நீதி­மன்­றங்­களில் விசா­ர­ணை­க­ளுக்­காகச் செல்லும் இவ்வாறான பெண்­களின் முகத்தில் காதி நீதி­ப­திகள் காறி உமிழ்கிறார்கள். துப்­பு­கி­றார்கள் என்­றெல்லாம் அன்று ஞான­சார தேரர் கதை கூறினார்.

மீண்டும் அவ்­வா­றான கதை­களை புதுப்­பிக்க ஆரம்­பித்­தி­ருக்­கிறார். முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை செய்வதற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யி­ருக்­கி­றது. இந்த திருத்த யோசனை கடந்த அர­சாங்­கத்தின் காலத்தில் அப்­போ­தைய அமைச்சர் ரவூப் ஹக்­கீ­மி­னாலே முன்­வைக்­கப்­பட்­டது. அத்­தோடு முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த பலரும் அச்­சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் என வலி­யு­றுத்தி வந்­தார்கள்.

இச்­சட்­டத்தில் முஸ்லிம் பெண்­களின் திரு­ம­ண­ வ­ய­தெல்லை உள்ளிட்ட­ பல முக்­கிய விட­யங்கள் மாற்­றப்­ப­ட­ வேண்­டு­மென நாமும் தெரி­வித்தோம். முஸ்லிம் பெண்கள் 13, 14, 15, 16 வய­து­க­ளிலும் திருமணம் செய்து வைக்­கப்­ப­டு­கின்­றனர். 

நாட்­டின் ­பொ­துச்­சட்­டத்­துக்கு அமைய இது தண்­டனைக்­கு­ரிய குற்றமாகும். இது சிறுவர் துஷ்­பி­ர­யோ­க­மா­கவே கரு­தப்­படும். எனவே நாட்டில் இரு சட்­டங்கள் அமுலில் இருக்க முடி­யாது. இச்­சட்டம் திருத்தி­ய­மைக்­கப்­ப­ட­ வேண்டும் என்று ஞான­சார தேரர் வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்வதற்கு உலமா சபை எதிர்ப்பு தெரி­விக்­கி­றது. உலமா சபையின் தப்லீக் பிரி­வினர் எனும் குழு­வினர் எதிர்க்­கின்­றனர். அவர்கள் வெளி மாவட்­டங்­க­ளுக்கு சென்­று­ தங்­கி­யி­ருக்கும் காலத்தில் அம்மாவட்டங்களில் மனை­வி­யி­னரை வைத்­துக் ­கொள்­கின்­றனர். இது சட்ட ரீதி­யாக வழங்­கப்­பட்­டுள்ள 4 மனை­வி­யர்­க­ளுக்கு மேலதிகமா­ன­வர்­க­ளாகும். இவர்­களே சட்­டங்­களில் திருத்­தங்­களை எதிர்க்­கின்­றனர்.

காதி நீதி­மன்­றத்தின் மூலம் தாப­ரிப்பு பணம் பெற்­றுக் ­கொள்­வ­தற்கு வழங்­கப்­பட்ட தீர்ப்­புகள் செயற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை என பாதிக்கப்­பட்ட பெண்கள் எம்­மிடம் முறை­யி­டு­கி­றார்கள். இத்தீர்ப்புகள் அடிப்­ப­டை­வா­தத்தை நோக்கி தள்­ளப்­ப­டு­வ­தற்­கான அழுத்­தத்தை வீடு­க­ளுக்­குள்­ளேயே ஏற்­ப­டுத்­து­கின்­றன.

இந்­நி­லையில் முஸ்­லிம்­களின் விவ­கா­ரங்கள் பாரம்­ப­ரி­யங்கள் பாதுகாக்­கப்­பட்டு பொதுச்­சட்­டத்­தின் கீழ் உள்­வாங்­கப்­ப­ட ­வேண்டும் என என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் ஞான­சார தேரர் கூறு­வது போன்றோ அல்­லது அமைச்­ச­ர­வையின் பெரும்­பான்மை இன அமைச்­சர்கள் தீர்­மா­னித்­தது போன்றோ அல்­லாமல் முஸ்லிம் சமூகத்தின் ஆணை­யு­டனே திருத்­தப்­ப­ட ­வேண்டும் என்­பதே சமூகத்தின் நிலைப்­பா­டாகும்.

புர்கா, நிகாப் தடை
சில மாதங்­க­ளுக்கு முன்பு பொதுமக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத்வீ­ர­சே­கர சமர்ப்­பித்த முஸ்லிம் பெண்­களின் புர்கா மற்றும் நிகாபை தடை­ செய்­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்­துக்கு என்ன நடந்­தது எனவும் தேரர் கேள்வி யெழுப்­பு­யுள்ளார்.

தற்­போது முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்ட விவ­காரம் பேசு பொரு­ளா­கி­யதன் பின்பு புர்கா மற்றும் நிகாப் தடை விவ­காரம் மறக்க­டிக்­கப்­பட்­டு­ விட்­டது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அமைச்சர் சரத் ­வீ­ர­சே­கரவினால் சமர்­ப்பிக்­கப்­பட்ட அமைச்­ச­ரவைப் பத்­திரம் தொடர்பில் ஆரா­ய்ந்­த­போது பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கோரிக்­கைக்கு அமைய அது நடை­மு­றை­ப்ப­டுத்­தப்­ப­ட­வில்லை எனத் தெரி­ய­வ­ரு­கி­றது. 

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஆலோ­சனை இது தொடர்பில் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­ வேண்­டு­மென பிர­தமர் கோரியுள்ள­தாக அறி­யக்­கி­டைக்­கி­றது.

அமைச்சர் அலி சப்ரி, உஸ்தாத், மன்சூர் ரொஹான் குண­ரத்ன
ஞான­சா­ர­ தேரர் நீதி­ய­மைச்சர் அலி­ சப்ரி, உஸ்தாத் மன்சூர் மற்றும் பாது­காப்பு அமைச்சின் ஆலோ­சகர் பேரா­சி­ரியர் ரொஹான் குணரத்ன மீதும் குற்றம் சுமத்­தி­யுள்ளார். 

அமைச்சர் அலி ­சப்­ரி,­ உஸ்தாத் மன்­சூரின் மாண­வ­ராக இருந்துள்ளார். இந்­நி­லையில் அலி­ சப்­ரி­யு­டைய சில செயற்பாடுகளை ஏற்­றுக்­ கொள்ள முடி­யாது, திருப்­தி­யுற முடி­யாது என்றும் கூறி­யுள்ளார்.

ரொஹான் குண­ரத்ன பொது­பலசேனா அமைப்பின் செயற்பாடுகளை கடு­மை­யாக விமர்­சித்­தவர். அத்­தோடு நாட்டில் போர் இடம்­பெற்று வந்த காலப்­ப­கு­தியில் அதனை முடி­வுக்குக் கொண்­டு­வர முடி­யா­தெனக் கூறி­யவர். 

இலங்­கையில் அடிப்­ப­டை­வாத தீவி­ர­வாத இயக்­கங்கள் இயங்கவில்லை எனக் கூறி­யவர். இவ்­வா­றான ஒருவர் பாது­காப்பு அமைச்சின் முக்­கிய பத­விக்கு ஏன் நிய­மிக்­கப்­ப­ட­ வேண்டும் எனவும் ஞானசார தேரர் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

நீதி­ய­மைச்சர் அலி­ சப்ரி உஸ்தாத் மன்­சூரின் மாண­வ­ராக இருந்தார். அதனால் அடிப்­ப­டை­வாத கருத்­து­களை உள்­வாங்­கி­யி­ருப்பார் என்ற கருத்­துப்­பட ஞான­சா­ர­ தேரர் கருத்து வெளி­யி­டு­வது கண்டிக்கத்தக்க­தாகும். 

ஞான­சார தேரர் மீண்டும் நாட்டில் வெறுப்பு உணர்­வுகள் மூலம் முறுகல் நிலையை உரு­வாக்க முயற்­சிப்­ப­தாக கரு­த­ மு­டி­கி­றது. உயிர்த்த ஞாயிறு அறிக்­கை­க­ளிலும் ஞான­சா­ர ­தே­ரரின் செயற்பாடுகள் பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவரின் உரைகள் முஸ்லிம் இளை­ஞர்­களை தீவி­ர­வா­தத்தின் பால் தள்ளியதாக அறிக்கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மக்­தப்கள் புன­ர­மைப்பு திட்டம்
நாடெங்கும் இயங்­கி­ வரும் மக்­தப்­களை வக்­பு­ ச­பையின் கீழ் கொண்டு வர மேற்­கொண்­டுள்ள தீர்­மா­னத்­தையும் ஞான­சார தேரர் சாடி­யுள்­ளார். இது நிறுத்­தப்­பட வேண்டும் என­வும் ­கோ­ரி­யுள்ளார். இந்த தீர்­மா­னத்­துக்கு சூத்­தி­ர­தா­ரி­க­ளாக அமைச்சர் அலி­ சப்ரி, உஸ்தாத் மன்சூர், ரொஹான் குண­ரத்ன ஆகி­யோரை சாடி­யுள்ளார்.

பன்­முக சமூ­கங்கள் வாழும் இலங்­கையில் சிறந்த தலைமுறையினரைக் கட்­டி­யெ­ழுப்ப சிறார்­க­ளுக்­கான இஸ்­லா­மிய அற­நெ­றிப்­பா­ட­சா­லைகள் எனும் திட்­டத்­தையே வக்­பு­ சபை முன்வைத்­துள்­ளது.

இதன் கீழ் மக்தப் புன­ர­மைப்­புத் ­திட்­டத்தில் பயன் ­பெற்­று ­வரும் சிறார்கள் அனை­வ­ரையும் வக்பு சபையின் ‘இஸ்­லா­மிய அறநெறிப் பா­ட­சா­லைகள் திட்­டத்தில் உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ளனர்

ஞான­சார தேரர்
ஞான­சார தேரர் மீண்டும் இனவாதத்தை கக்குவது ஆபத்­தா­ன­தாகும். நாட்டில் நல்­லி­ணக்­கத்தைப் பலப்­ப­டுத்­து­வ­தற்கு ஞானசார தேரர் தொடர்பில் உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு வழங்கியுள்ள சிபாரிசுகளை அரசு கவனத்திற்கொள்ள வேண்டும்.

Vidivelli

No comments:

Post a Comment