(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடன் நெருக்கடி காரணமாக அடுத்த சில மாதங்களில் மின்சார சபையும் நெருக்கடிக்குள் விழும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கடன் நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சி, பெற்றோலிய கூட்டுத்தாபன வீழ்ச்சி என சகல நெருக்கடிகளும் ஒன்றாக சேர்ந்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை, அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பொருளாதாரமும் அதனுடன் தொடர்புபட்ட எரிபொருள் நெருக்கடி மற்றும் இவற்றுக்கு காரணமான அரசியல் நெருக்கடி நிலைமைக்கு நாம் முகங்கொடுத்து வருகின்றோம்.
இன்றுள்ள கடன்களை கையாள நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு எம்மிடம் இல்லை. கடன்களை பெற்றுக் கொள்ள அரச வங்கிகளுக்கு பிணை வைக்கவும் முடியாது. இந்த நெருக்கடிக்குள் எரிபொருள், மருந்து, உரம், அத்தியாவசிய பொருட்களை எவ்வாறு இறக்குமதி செய்வது என்ற பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
No comments:
Post a Comment