தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பொலிசில் சரணடைந்தததை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா (வயது 79). இவர் தனது 9 ஆண்டு பதவிக் காலத்தில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்கு மறுத்து விட்டார்.
இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் அவருக்கு 15 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாதம் 29ஆம் திகதி உத்தரவிட்டது.
அவர் சரணடைவதற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. இது அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் சரண் அடையாவிட்டால், கைது செய்யப்படுவார் என பொலிஸ் எச்சரித்தது.
இந்த நிலையில் கெடு முடிவடையும் நேரத்தில் அவர் பொலிசில் சரண் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக அவரது மகள் டுது ஜூமா சம்புட்லா டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “எனது தந்தை சிறைக்கு சென்று கொண்டு இருக்கிறார். ஆனாலும் அவர் நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார்” என கூறப்பட்டுள்ளது.
ஜேக்கப் ஜூமா அறக்கட்டளை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “ஜூமா சிறைவாச உத்தரவுக்கு இணங்க முடிவு செய்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் சிறைக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
No comments:
Post a Comment