(எம்.னோசித்ரா)
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இன்று புதன்கிழமை மாலை இனங்காணப்பட்ட 1380 தொற்றாளர்களுடன் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 301272 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 271855 பேர் குணமடைந்துள்ளதோடு, 25222 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் விரும்பியோ விரும்பாமலோ மேலும் ஓரிரு வருடங்கள் கொவிட் தொற்றுடன் வாழ வேண்டியுள்ளதால், தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதோடு அடிப்படை சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
மூன்றாம் அலையில் 196000 தொற்றாளர்கள்
கொவிட் பரவல் மூன்றாம் அலையில் மாத்திரம் அதாவது கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பமான மூன்றாவது அலையில் மாத்திரம் 196120 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்தார்.
இவ்வாறு பாரிய கொத்தணியொன்று உருவாகி நாளாந்தம் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படும் போது அதனை திடீரென கட்டுப்படுத்த முடியாது. படிப்படியாகவே தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும்.
மூன்றாம் அலை ஆரம்பமான கால கட்டத்தில் நாளொன்றுக்கு சுமார் 3000 தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலைமையும் காணப்பட்டது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அந்த நிலைமை கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போது மீண்டும் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment