15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கமைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் குறிந்த சந்தேகநபர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் ஊடக பணிப்பாளர் கேர்ணல் சந்திம குமாரசிங்ஹ விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் வகையில் மேற்படி சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணரின் சேவையை பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இலங்கை கடற்படை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம் செய்துள்ளது.
மேலும், பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய இந்த சம்பவம் குறித்து தனித்தனி உள்ளக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கடற்படைத் தளபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பான மறு அறிவித்தல் வரும் வரை குறித்த நபர் இலங்கை கடற்படையின் எந்தவொரு கடற்படை தளத்திற்குள்ளோ அது சார்ந்த நிறுவனங்களுக்குள்ளோ நுழைய அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட குறித்த இருதய சத்திர சிகிச்சை நிபுணர் நேற்றையதினம் (06) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபருக்கு எதிர்வரும் ஜூலை 09ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ஸாதிக் ஷிஹான்)
No comments:
Post a Comment