துமிந்த சில்வாவை விடுதலை செய்து அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்ட அதிகாரத்தை ஜனாதிபதி துஷ்பிரயோகம் செய்கிறார், இந்நடவடிக்கை தாய்நாட்டை நாகரிக உலகத்திலிருந்து மேலும் தனிமைப்படுத்தும் - ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 24, 2021

துமிந்த சில்வாவை விடுதலை செய்து அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்ட அதிகாரத்தை ஜனாதிபதி துஷ்பிரயோகம் செய்கிறார், இந்நடவடிக்கை தாய்நாட்டை நாகரிக உலகத்திலிருந்து மேலும் தனிமைப்படுத்தும் - ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்

(எம்.மனோசித்ரா)

துமிந்த சில்வாவிற்கு மன்னிப்பளித்துள்ளமை போன்ற சம்பவங்கள் பழங்குடி நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தின் கீழுள்ள ஓர் ஆட்சியில் மாத்திரமே நடக்க முடியும். அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்ட அதிகாரத்தை ஜனாதிபதி துஷ்பிரயோகம் செய்வதை ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச அமைப்புகள் ஏற்கனவே இலங்கையில் மனித உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்ற நிலையில், துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளமையானது நாளுக்குநாள் இலங்கை தொடர்பில் சர்வதேச அபிமானத்தை மேலும் மோசமாக்கும் செயற்பாடாக அமையும். 

எனவே இந்த முடிவை உடனடியாக வாபஸ் பெற்று, சட்டத்தின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும், நீதிபதிகளின் கௌரவத்தையும் பாதுகாக்குமாறு ஜனாதிபதியை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார அறிக்கையொன்றினை வெளியிட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது ஒரு நாட்டில் நீதித்துறையானது ஜனநாயக நிர்வாகத்தின் மிக முக்கியமான காரணியாக கருதப்படுகிறது. சட்டத்தின் இறையாண்மை மட்டுமல்லாது, இலங்கையின் சுதந்திரமும் இன்று சவாலுக்குட்பட்டுள்ளது என்பது துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு ஜனாதிபதி மன்னிப்பிலிருந்து தெளிவாகிறது.

மன்னிப்பு வழங்குவதற்கான சரியான நடைமுறையை ஜனாதிபதி பின்பற்றியுள்ளாரா என்ற கேள்வியையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எழுப்பியுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர் மாத்திரமே அரசாங்கம் என்ற எண்ணப்பாட்டிலேயே செயல்படுகிறார் என்று தெரிகிறது. அவரது நடவடிக்கைகள் பாராளுமன்றமும், நீதித்துறையும் அவர் விரும்பியபடி செயல்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது. இது நாட்டின் ஜனநாயக ஆட்சிக்கு கடுமையான அச்சுறுத்தலாகும். 

சர்வதேச அமைப்புகள் ஏற்கனவே இலங்கையில் மனித உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் சமீபத்திய தீர்மானம் நாட்டின் எதிர்கால பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது.

அரசியல் பழிவாங்கலுக்கான ஜனாதிபதி ஆணைக்குழு எனும் அபகீர்த்தி ஆணைக்குவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து நீதிமன்றம் வழங்கிய முடிவுகளை மாற்றியமைக்க சட்டமா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற முடிவுகளை அமைச்சரவை மூலம் மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சட்டம் அல்லது நாகரிகம் அற்ற இடத்திற்கு நாடு கொண்டு செல்லப்படுகின்றமை இத்தகைய நடவடிக்கைகளிலிருந்து தெளிவாகிறது.

உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவால் உறுதிப்படுத்தப்பட்ட மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்றம் வழங்கிய தண்டனை நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்றப்பட்டால், அது நாட்டில் நல்லாட்சி குறித்த கேள்வியை எழுப்புகிறது. இந்த சம்பவம் மிகச்சிறப்பாக திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது இரகசியமல்ல. 

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழுவுடன் எந்த தொடர்பும் இல்லாத துமிந்த சில்வாவின் வழக்கை ஆணைக்குழுவின் இறுதி சந்தர்ப்பத்தில் ஏற்றுக் கொள்ளவும், இதுபோன்ற தீவிரமான முடிவை அரசியல் பழிவாங்கலில் பதிவு செய்தமையும், இந்த முடிவை எடுத்த அப்போதைய தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளுக்கு இது ஒரு அவமானமான செயலாகும்.

துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு கோரும் விதமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைப் பெறுவதும் இந்த வெட்கமற்ற முடிவுக்கான பின்னணி அமைப்பாகும் என்பது தெளிவாகிறது. 

நாளுக்குநாள் நாட்டின் சர்வதேச அபிமானத்தை மோசமாக்கி வரும் அரசாங்கம், இந்த நடவடிக்கையின் மூலம் தாய்நாட்டை நாகரிக உலகத்திலிருந்து மேலும் தனிமைப்படுத்தும்.

சட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்கள் அதிகாரத்தை வழங்கவில்லை. துமிந்த சில்வா மீது சாற்றப்பட்டது கொலைக் குற்றச்சாட்டாகும். அந்த கொலையில் ஒரு பாதிக்கப்பட்ட தரப்பும் உள்ளது.

அரசாங்கம் தனது அரசியல் சகாவை மன்னித்தது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தால் வழங்கப்பட்ட நீதியை இழக்கச் செய்வதாகும். இத்தகைய சம்பவங்கள் பழங்குடி நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தின் கீழுள்ள ஓர் ஆட்சியில் மாத்திரமே நடக்க முடியும். அரசியலமைப்பால் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை ஜனாதிபதி துஷ்பிரயோகம் செய்வதை ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக கண்டிக்கிறது.

ஜனாதிபதியின் இந்த தவறான முன்மாதிரி நாட்டின் எதிர்காலத்தையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே இந்த தீர்ப்பை உடனடியாக வாபஸ் பெற்று, சட்டத்தின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும், மாண்புமிகு நீதிபதிகளின் கௌரவத்தையும் பாதுகாக்குமாறு ஜனாதிபதியை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment