எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் எமது கடல் வளத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட போதிலும் கடல் உணவுகளை உட்கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை என்பதை நாரா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், நாம் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டே மீன் உணவுகளை கொண்டுவருகின்றோம். ஆகவே மக்கள் அனாவசியமான அச்சம் கொள்ளத் தேவையில்லை என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட கேள்வி நேரத்தில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தை அடுத்து மீனவர் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஆளும் கட்சி உறுப்பினர் பிரேமலால் தொலவத்த கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறுகையில், கப்பல் விபத்தால் பாதிக்கபட்டுள்ள மீனவர் குடும்பங்கள் மற்றும் மீன்பிடி தொழிலுடன் இணைந்த தொழிலை மேற்கொள்ளும் குடும்பங்களுக்கும் தற்காலிக நிவாரணத் தொகையாக ஐயாயிரம் ரூபாவை கொடுக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் உரிமையாளர்களிடம் இருந்து நட்டஈடு கோரப்பட்டு மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும். அதேபோல் கப்பல் விபத்தால் ஏற்பட்டுள்ள சகல விதமான பாதிப்புகளுக்கும் ஏற்ற வகையிலான நட்டஈடு பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகின்றது.
மேலும் மீன்பிடியில் ஈடுபடக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்கப்படும். மீனவர்களுக்கான எரிபொருள் சலுகையும் பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாரா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின்படி கடல் உணவுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறியுள்ளனர்.
எனவே கடல் உணவுகளை உற்கொள்ள முடியும். கடல் உணவு உண்பதற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, மக்கள் இதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை, நாம் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டே கடல் உணவுகளை கொண்டுவருகின்றோம். ஆகவே மக்கள் அனாவசியமான அச்சம் கொள்ளத் தேவையில்லை.
மேலும் மீனவர்களுக்கு கிடைக்கும் ஐயாயிரம் ரூபா நிவாரணம் என்பது அவர்களுக்கு கொடுக்கும் தற்காலிக நிவாரணமே. இடைக்கால நட்டஈடு பெற்றுக் கொள்ளும் நோக்கில் இரண்டு வாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக குறித்த நிறுவனத்திடம் கோரியுள்ளோம். சட்ட முறைப்படி மீன்பிடி மக்களுக்கு கொடுக்கும் சகல நட்டஈட்டை பெற்றுக் கொடுப்போம் என்றார்.
No comments:
Post a Comment