கொரோனா தொற்றாளர்களை ஏற்றி சென்ற பஸ் மோதியதில் விவசாயி உயிரிழப்பு : கற்கள் எறிந்தவர்கள் மீது இராணுவம் நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் குழப்பம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 10, 2021

கொரோனா தொற்றாளர்களை ஏற்றி சென்ற பஸ் மோதியதில் விவசாயி உயிரிழப்பு : கற்கள் எறிந்தவர்கள் மீது இராணுவம் நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் குழப்பம்

யாழ்ப்பாணம், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை கொவிட்-19 நோய்த் தொற்றாளர்களை ஏற்றி சென்ற பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் விவசாயி ஒருவரே உயிரிழந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பேருந்துக்கு கற்கள் எறியப்பட்டன. அதனால் பேருந்தில் பாதுகாப்புக்கு பயணித்த இராணுவம் கற்கள் எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் 9 ஆம் திகதி மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. மட்டுவில் சந்திரபுரன் வட்டன் வேலாயுதம் (வயது-70) உயிரிழந்துள்ளார்.

தென்னிலங்கையிலிருந்து 5 பேருந்துகளில் கொவிட்-19 நோய்த் தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த விவசாயி ஒருவரை பேருந்து ஒன்று மோதியதில் அவர் வீதியில் சாய்ந்தார்.

சுயநினைவற்ற அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பேருந்துகளுக்கு கற்கள் எறியப்பட்டன. அதனால் பேருந்துகளில் பாதுகாப்புக்காகப் பயணித்த இராணுவத்தினர் கற்கள் வீசியோர் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டனர்.

மேலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். கற்கள் எறிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

சம்பவத்தையடுத்து விபத்துக்குள்ளான பேருந்து தவிர்ந்த ஏனைய 4 பேருந்துகளும் அங்கிருந்து அனுப்பப்பட்டன

No comments:

Post a Comment