நாட்டு மக்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களின் நன்மை கருதி அரசாங்கம் சில சலுகைகளையும் அத்துடன் சில சட்டங்களை தளர்த்தியும் உள்ள நிலையில் அதை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.
எவ்வாறெனினும் அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள நிலையில் அதனை மீளாய்வு செய்ய நேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி சலுகைகளை மக்கள் துஷ்பிரயோகம் செய்வதை காண முடிவதாக தெரிவித்துள்ள அவர் அவ்வாறு செயற்பட வேண்டாம் என்று நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் அவ்வாறு செயற்பட்டால் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கை பெரும் கஷ்டமானதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலானவர்களின் செயற்பாடுகள் சிறப்பாக உள்ள நிலையில் சிலர் மிக மோசமாக செயற்பட்டு வருகின்றனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ள இராணுவத் தளபதி, நாட்டில் பிரதான வீதிகள் சிலவற்றில் பொதுமக்களின் அதிகரிப்பை நேற்றைய தினம் காண முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதனை கட்டுப்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட பிரிவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முறையான வேலைத்திட்டம் ஒன்றை விரைவாக அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வீடுகளில் இருந்து செயற்படுவோருக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ள இராணுவத் தளபதி கொரோனவைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மக்களின் பூரண ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது என்றும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment