நீரிழிவு நோயாளர்கள் தடுப்பூசியைப் பெற எவ்வித தயக்கத்தையும் காண்பிக்கத் தேவையில்லை, முற்றிலும் பாதுகாப்பானதும் செயற்திறன் வாய்ந்ததுமாகும் : சுரப்பியியல் நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 22, 2021

நீரிழிவு நோயாளர்கள் தடுப்பூசியைப் பெற எவ்வித தயக்கத்தையும் காண்பிக்கத் தேவையில்லை, முற்றிலும் பாதுகாப்பானதும் செயற்திறன் வாய்ந்ததுமாகும் : சுரப்பியியல் நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர்கள்

(நா.தனுஜா)

கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதால் ஏதேனும் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக நீரிழிவு நோயாளர்கள் தடுப்பூசி பெறுவதைப் பெருமளவிற்குத் தவிர்த்து வருகின்றனர். இலங்கையில் வழங்கப்படுகின்ற அனைத்துத் தடுப்பூசிகளும் நீரிழிவு நோயாளர்கள் உட்பட எந்தவொரு வயதினருக்கும் முற்றிலும் பாதுகாப்பானதும் செயற்திறன் வாய்ந்ததுமாகும். ஆகவே இன்சுலின் உட்பட வேறு மருந்துப் பொருட்களைப் பயன்படுத்தும் நீரிழிவு நோயாளர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித தயக்கத்தையும் காண்பிக்கத் தேவையில்லை என்று சுரப்பியியல் நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் சுரப்பியியல் நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, தற்போது எமது நாடு கொவிட்-19 வைரஸ் மூன்றாம் அலை பரவலுக்கு முகங்கொடுத்திருப்பதுடன் அனைத்து மாகாணங்களிலும் பதிவாகும் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையிலும் சடுதியான அதிகரிப்பொன்று ஏற்பட்டுள்ளது. 

அரசாங்கமும் சுகாதாரப் பிரிவும் இணைந்து கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும் கூட, நாளாந்தம் அதிக எண்ணிக்கையான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாடளாவிய ரீதியிலுள்ள நீரிழிவு நோயாளர்கள் மத்தியில் இவ்விடயத்தில் பல்வேறு பொய்யான நம்பிக்கைகள் காணப்படும் அதேவேளை, சரியான தகவல்கள் அவர்களைச் சென்றடைவதும் குறைவாக உள்ளது. 

குறிப்பாக கொவிட்-19 தொற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ளும் நோக்கில் நீரிழிவு நோயாளர்கள் தடுப்பூசி பெற்றுக் கொண்டால், அதனால் மேலும் பல சிக்கல்கள் ஏற்படலாம் என்ற கருதுகோள் காணப்படுகின்றது. எனினும் ஏனைய சாதாரண பிரஜைகளை விடவும் நீரிழிவு நோயாளர்கள் இலகுவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகக் கூடிய வாய்ப்புக்கள் உயர்வாகக் காணப்படுவதுடன், ஏனையோருடன் ஒப்பிடுகையில் நீரிழிவு நோயாளர்களுக்குத் தொற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களும் உயர்வாகும் என்பது சந்தேகத்திற்கிடமின்றி விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

அதுமாத்திரமன்றி நீரிழிவு நோயாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உயர்வாக உள்ளது.

மேலும், அறிக்கைகளின் பிரகாரம் தொற்றினால் மரணிப்போரில் 84 சதவீதமானோர், ஏற்கனவே தொற்றாநோய் நிலைமைகளைக் கொண்டிருந்துள்ளனர். அதிலும் குறிப்பாக அவர்களில் பெருமளவானோர் நீரிழிவு, உயர்குருதியழுத்தம், இருதய நோய்கள், சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாவர். எனவே நீரிழிவு மற்றும் மேற்குறிப்பிட்ட தொற்றாநோய்களைக் கொண்டவர்கள் இந்த கொவிட்-19 வைரஸ் பரவல் காலத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

எனினும் நீரிழிவு நோயாளர்கள் தகுந்த கட்டுப்பாடுகளுடன் இருப்பதுடன் வேறெந்த தொற்றா நோய்களையும் கொண்டிருக்காவிட்டால், கொரோனா வைரஸ் தொற்றினால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறைவாகவே இருக்கும். 

மிக மோசமான இந்தக் காலப்பகுதியில் உரியவாறு மருந்துகளை உட்கொள்ளல், முறையானதும் ஆரோக்கியமானதுமான உணவு முறை, சீரான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் நீரிழிவு நோயாளர்கள் அவர்களது உடலிலுள்ள சீனியின் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது அவசியமாகும். 

அவர்கள் காபோவைதரேற்று மற்றும் சீனி அதிகமுள்ள உணவுகளைத் தவிர்த்துக் கொள்வதுடன் வெளிநபர்களுடன் தொடர்புகளைப் பேணாதவாறு இயலுமானவரை தமது வீடுகளுக்குள்ளேயே நடைபயிற்சி செய்ய வேண்டும்.

மேலும் இன்சுலின் உட்பட நீரிழிவு நோய்க்கான மருந்துப் பொருட்களை இயலுமானவரை வீடுகளுக்கே தருவித்துக் கொள்வதுடன், உடலிலுள்ள சீனியின் அளவை வீட்டிலிருந்தவாறே சுயபரிசோதனை செய்யக்கூடிய வசதிகளைக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். 

சீனியின் அளவு உயரும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை நாட வேண்டும். நீரிழிவு நோயாளர்களைப் பொறுத்தவரை, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனைய அனைவரும் இயலுமானவரை வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும்.

அடுத்ததாக ஏதேனும் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக நீரிழிவு நோயாளர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதைப் பெருமளவிற்குத் தவிர்ப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பெற்றுக் கொள்வதொன்றே கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழிமுறையாகும் என்றார்.

No comments:

Post a Comment