(இராஜதுரை ஹஷான்)
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் எதிர்வரும் வாரம் முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையான முறையில் செயற்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
நாடு தழுவிய ரீதியில் தற்போது அமுலிலுள்ள பயணத்தடை தளர்த்தப்பட்டன் பின்னர் பொது போக்குவரத்து சேவையினை மீள ஆரம்பிப்பது குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு தற்போது நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் வாரம் முதல் பல அத்தியாவசிய சேவைகளை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளியை பேணுவது அவசியமாகும். அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளில் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிப்பதில் பாரிய சிக்கல் நிலை காணப்படுகிறது. பயணத்தடை தளர்த்தப்பட்டன் பின்னர் பொது போக்குவரத்து சேவையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையான முறையில் செயற்படுத்தப்படும்.
அரச மற்றும் தனியார் சேவையாளர்கள் கடமைக்கு வருகை தரும் நேரத்தை மாற்றியமைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு சேவையாளர் ஒரு வாரத்தில் குறைந்தளவு நாட்களில் சேவைக்கு வருகை தரும் செயற்திட்டம் மீண்டும் செயற்படுத்தப்படும். அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணம் செய்ய முடியும்.
அலுவலக புகையிரத சேவையினை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியான சூழலில் பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தேவைற்ற பயணங்களை முடிந்தளவிற்கு குறைத்துக் கொள்வது அவசியமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment