(எம்.மனோசித்ரா)
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாட்டிலுள்ள சொத்து மதிப்பை விட அதிகமான நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. செவ்வாய்கிழமை இவ்வாறு 208 பில்லியன் ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.
இவ்வாறு சொத்து மதிப்பிற்கும் அதிகமாக நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டால் பணவீக்கம் ஏற்படும் என்பதை அறிந்திருந்தும், இதுபோன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது பாரிய பொருளாதார நெருக்கடியை நாட்டுக்கு ஏற்படுத்தும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாட்டிலுள்ள சொத்து மதிப்பை விட அதிகமான நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. 208 பில்லியன் ரூபா என்பது நாட்டிலுள்ள சொத்து மதிப்பை விட அதிக தொகையாகும்.
இவ்வாறு சொத்து மதிப்பை விட அதிக நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதால் பணவீக்கம் ஏற்படும் என்பது சாதாரண தரத்திலேயே கற்று கொடுக்கப்படுகிறது. அதனை அறிந்திருந்தும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது நாட்டுக்கு பாரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். ஆடை தொழிற்சாலையில் ஆடைகளை தைப்பதைப் போன்று பியகமவிலுள்ள தொழிற்சாலையில் இவர்கள் பணத்தை அச்சிடுகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்வியை அடுத்து பஷில் ராஜபக்ஷ பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வார் என்று கூறுகின்றனர். ஆனால் அவரால் மாத்திரமல்ல எந்தவொரு ராஜபக்ஷவாலும் நாட்டை சிறப்பாக நிர்வகிக்க முடியாது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.
பஷில் ராஜபக்ஷவுக்கு அலங்காரம் செய்து அவரை அழகுபடுத்தி முன்னிருத்துவதால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கப் போவதில்லை. மாறாக இவ்வாறு அச்சிடப்பட்டுள்ள நாணயத்தாள்களையே அவர் மக்களுக்கு பகிர்ந்தளிப்பார். இதுதான் இவர்களுடைய புதிய பொருளாதார உத்தியாகும்.
உரப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைக்கு நாடு முகங்கொடுத்துள்ள இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா 2.1 பில்லியன் ரூபா செலவில் பறவைகள் பூங்காவொன்றை திறந்து வைத்துள்ளார்.
நாட்டு மக்கள் ஒருவேளை உணவிற்கே சிரமப்படும் இந்த சந்தர்ப்பத்தில் இது தேவையான ஒன்றா? இதே நிலைமை தொடருமாயின் மீண்டும் வரிசையில் நின்றி பாண் வாங்கி உண்ண வேண்டிய நிலையே ஏற்படும் என்றார்.
No comments:
Post a Comment