கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை குறைவு : காரணமுமின்றி வருகை தந்த 1,386 வாகனங்கள் அடையாளம் : 24 மணித்தியாலயத்திற்குள் 975 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, June 5, 2021

கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை குறைவு : காரணமுமின்றி வருகை தந்த 1,386 வாகனங்கள் அடையாளம் : 24 மணித்தியாலயத்திற்குள் 975 பேர் கைது

(செ.தேன்மொழி)

கொழும்புக்குள் வருகைதரும் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த நாட்களை விட குறைவடைந்துள்ள போதிலும், எவ்வித காரணமுமின்றி வருகை தந்த 1,386 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த வாகனங்களில் பயணித்த அனைவரும் எச்சரிக்கப்பட்டதுடன், சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொழும்புக்குள் வருகைதரும் வாகனங்கள் தொடர்பில் தற்போது விசேட கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கமைய நேற்று காலை 6.30 மணி முதல் முற்பகல் 9.30 மணி வரையில் முன்னெடுக்கப்பட்டு மூன்று மணி நேர கணக்கெடுப்பின்போது 59,280 வாகனங்கள் கொழும்புக்குள் வந்துள்ளதாக பதிவாகியுள்ளன.

கடந்த இரு தினங்களுடன் ஒப்பிடுகையில் நேற்று வந்த வாகனங்களின் தொகை 3000 என்ற அடிப்படையில் குறைவடைந்துள்ளன.

மேலும், வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் பணியாளர்களை அழைத்து வந்த 16,282 வாகனங்கள் வந்துள்ளன. மேல் மாகாணத்தின் எல்லை பகுதிகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கையின் போது 2,942 வாகனங்களில் பயணித்த 5,249 பேர் கண்காணிக்கப்பட்டுள்ளனர். 

அதற்கமைய போக்குவரத்து கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு புறம்பாக எல்லையை கடக்க முற்பட்ட 139 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் 198 பேர் பயணித்துள்ளதுடன் அவர்கள் அனைவரும் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மாத்தளை பகுதியிலேயே அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 147 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், நிக்கவெரட்டிய பகுதியில் 80 பேரும், கண்டியில் 75 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 22 ஆயிரத்து 950 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment