(எம்.ஆர்.எம்.வசீம்)
இந்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவதை நிறுத்துவதாக இருந்தால் அதனை சுகாதார பிரிவினரே அது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். என்றாலும் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள கடுமையான சுகாதார வழிகாட்டல் காரணமாக சுற்றுலாப் பயணிகளில் வருகை பாரியளவில் குறைந்துள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கொவிட் தொற்று இந்தியாவில் தீவிரமாக பரவிவரும் நிலையில் இந்திய சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் வருவதை நிறுத்துவதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இந்தியாவில் கொவிட் தொற்று கட்டுப்பாட்டில் இருந்த சமயத்தில் அங்கிருந்து எயார் பபல்ஸ் திட்டம் முறையில் இலங்கைக்கு வருவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துதருமாறு நாங்கள்தான் இந்தியாவிடம் கோரி இருந்தோம்.
என்றாலும் இந்த திட்டம் ஆரம்பித்து சில தினங்களில்தான் இந்தியாவில் கொவிட் தொற்று மோசமான நிலை ஏற்பட்டது. அதனால் தற்போது நாங்கள் நிலைமையை உணர்ந்து இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துவர குறைத்திருக்கின்றோம். அவர்கள் இலங்கைக்கு வர முடியாத வகையில் எமது கட்டுப்பாடுகளை அமைத்திருக்கின்றோம்.
அத்துடன் சுற்றுலா பயணிகளின் வருகையை திடீரென எந்த நாட்டுக்கும் நிறுத்த முடியாது. அவ்வாறு செய்வதாக இருந்தால், சுகாதார பிரிவினர் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு குழு இது தொடர்பாக தீர்மானம் எடுக்க வேண்டும். என்றாலும் எயார் பபல்ஸ் முறையில் சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.
அத்துடன் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருவதாக இருந்தால் அவர்கள் எமது நாட்டில் தங்குவதற்கு ஹோட்டல் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.
என்றாலும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு ஹோட்டல் வசதிகளை வழங்குவதற்கு அதிகமானவர்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். அதனால் அவர்களின் வருகை குறைவடைந்துள்ளது.
அதேபோன்று இந்தியாவுக்கான படகு போக்குவரத்தும் குறைந்துள்ளது. அதேபோன்று இந்தியாவுக்கான ஏற்றுமதிகளும் குறைவடைந்துள்ளன என்றார்.
No comments:
Post a Comment