(இ.ராஜதுரை ஹஷான்)
கொழும்பு துறைமுகத்தில் 9.5 கிலோமீற்றர் தொலைவில் நங்கூரமிடப்பட்டு தீ விபத்துக்குள்ளாகியுள்ள எம்.வி. எக்ஸ்பிரஸ் கப்பல் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடுவதற்கு முன்னர் துறைமுக அதிகார சபையின் அனுமதியை பெறவில்லை என நகர அபிவிருத்தி, கரையோர பாதுகாப்பு கழிவு பொருட்கள் அகற்றல், சமுதாய தூய்மைப்படுத்தல் விவகார இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
அத்துடன் கப்பலில் இருந்த கொள்கலன் ஒன்றில் இரசாயன பதார்த்தம் கசிவு ஏற்பட்டுள்ளது என்பதையும் கப்பலின் நிர்வாக தரப்பினர் முன்கூட்டியே அறிவிக்கவில்லை. அபாயகரமான நிலையில் நாட்டின் கடற்பரப்பிற்குள் இக்கப்பல் நங்கூரமிடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது.
இந்த கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக இலங்கையின் கடற்பரப்பிற்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்பட்டுள்ள பாதிப்பினை தற்போது மதிப்பீடு செய்ய முடியாது. கப்பலில் இருந்த கொள்கலன்களும் தீக்கிரையாகியுள்ளன. கப்பல் தரை தட்டியவுடன் முன்னெடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் 9.5 கிலோமீற்றர் தொலைவில் தீ விபத்துக்குள்ளாகியுள்ள எம்.வி எக்ஷ்பிரஸ் கப்பல் குறித்து பொய்யான குற்றச்சாட்டுக்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
கடல் மார்க்க பயணத்தில் இந்த கப்பல் இலங்கைக்கு அதாவது கொழும்பு துறைமுக கடற்பரப்பிற்கு வர வேண்டிய மார்க்கம் காணப்படுகிறது.
மேலும், கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவல் காரணமாக எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கப்பல் தரை தட்டியதும் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் முன்னனெடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment