துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஒருநாள் விவாதத்தோடு துரிதமாக நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் ஏன் அவசரப்படுகிறது ? - ஹர்ஷன ராஜகருணா - News View

About Us

About Us

Breaking

Monday, May 3, 2021

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஒருநாள் விவாதத்தோடு துரிதமாக நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் ஏன் அவசரப்படுகிறது ? - ஹர்ஷன ராஜகருணா

(எம்.மனோசித்ரா)

நாட்டுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததும், சிக்கலுக்குரியதுமான கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஒருநாள் விவாதத்தோடு துரிதமாக நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் ஏன் அவசரப்படுகிறது ? தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் நிலைமையை தனக்கு தேவையான விடயங்களை மக்களுக்கு தெரியாமல் நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், அடுத்த வாரம் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இதன்போது கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது. எனினும் இந்த விவாதத்தை இவ்வளவு அவசரமாக நடத்த வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கோரினோம்.

ஒரே நாளில் இந்த விவாதத்தை நிறைவடைச் செய்ய வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளோம். அத்தோடு குறித்த சட்டமூலம் தொடர்பில் இதுவரையில் நீதிமன்றத்தினால் சபாநாயகருக்கு தெளிவுபடுத்தப்படவில்லை.

4 ஆம் திகதி நீதிமன்றத்தால் தெளிவுபடுத்தப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது. 5 ஆம் திகதி சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நாட்டுக்கு முக்கியத்துவமுடையதும் சிக்கலுக்குரியதுமான இந்த சட்டமூலம் ஏன் இவ்வளவு அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த விவாத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களேனும் ஒதுக்கப்பட வேண்டும்.

துறைமுக நகர அபிவிருத்தியை நிறுத்தும் எண்ணமோ எதிர்பார்ப்போ எதிர்க்கட்சிக்கு கிடையாது. எனவே இதனை வெற்றிகரமான அபிவிருத்தி திட்டமாக மாற்றுவதற்கு அது குறித்த சட்டமூலத்திற்கு அதிகளவான காலத்தை ஒதுக்கி விவாதங்களில் ஈடுபட்டு ஜனநாயக ரீதியில் செயற்படுமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் நிலைமையை அரசாங்கம் தனக்கு தேவையான விடயங்களை நாட்டு மக்களுக்கு தெரியாமல் நிறைவேற்றிக் கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்கிறது என்றார்.

No comments:

Post a Comment