ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான பயங்கர தாக்குதல்களுக்கு எதிராக நீதி கோரி பாக்தாத்தில் ஆயிரக் கணக்கானோர் முன்னெடுத்த பேரணியில் இடம்பெற்ற வன்முறையில் இரு ஈராக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 28 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
செவ்வாயன்று முன்னெடுக்கப்பட்ட பேரணியின்போது, பொலிஸார் அவர்களை கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்ததாக வைத்தியர்களும் பொலிஸாரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தெற்கு நகரமான திவானியாவைச் சேர்ந்த மொஹமட் பேக்கர் என்பவர் கழுத்தில் துப்பாக்கி சூட்டுக் காயம் உள்ளகிய நிலையில் உயிரிழந்ததாக அல்-கிண்டி வைத்தியசாலை வட்டாரம் உறுதிபடுத்தியது.
அதன் பின்னர் சம்பவத்தில் மேலும் ஒரு நபர் உயிரிழந்து விட்டதாக மற்றொரு வைத்தியசாலை ஆதாரங்கள் வெளிப்படுத்தின.
2019 ஆம் ஆண்டில் அரசாங்க ஊழல் மற்றும் திறமையின்மைக்கு எதிராக ஒரு எதிர்ப்பு இயக்கம் வெடித்ததில் இருந்து 70 க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் ஈராக்கில் கொலை, கொலை முயற்சிகள் மற்றும் கடத்தல்களுக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment