உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மைத்திரியே பொறுப்புக் கூற வேண்டும் - அடிப்படைவாத அமைப்புக்களை தடை செய்வதை நாம் வரவேற்கின்றோம் : ருவன் விஜேவர்தன - News View

About Us

About Us

Breaking

Thursday, April 8, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மைத்திரியே பொறுப்புக் கூற வேண்டும் - அடிப்படைவாத அமைப்புக்களை தடை செய்வதை நாம் வரவேற்கின்றோம் : ருவன் விஜேவர்தன

(செ.தேன்மொழி)

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்புக் கூற வேண்டியவர். இந்த தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவுக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தால் அதனை நாட்டின் தலைவர் அறியாதிருப்பதற்கான வாய்ப்பில்லை. எனவே அவரே பொறுப்புக் கூற வேண்டியவர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் அடிப்படைவாத கருத்துகளை பரப்பி வரும் அமைப்புக்களை தடை செய்ய வேண்டும் என்ற கருத்தை தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ருவன் விஜேவர்தன மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரிதாரிகளாக நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகியோரின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பில் மேலும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். 

பயங்கரவாதி சஹ்ரான் மற்றும் நௌபர் மௌலவி ஆகிய இருவருக்கும் இடையில் தலைமைத்துவம் தொடர்பில் குழப்பநிலைமை ஏற்பட்டிருந்தது. அதனால் அதிலொரு சிக்கல் தன்மையுள்ளது. இந்நிலையில் மௌலவி பிரதான சூத்திரதாரி என்றால் அதற்கான ஆதாரங்களும் வெளியிடப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக இல்லாவிட்டாலும் அவரே பொறுப்புக் கூற வேண்டியவர். நாட்டில் தாக்குதல் ஒன்று இடம்பெற வாய்ப்புள்ளதாக அரச புலனாய்வு துறையினர் அறிந்து கொண்டிருந்தால், அதனை நாட்டின் தலைவருக்கு தெரியப்படுத்தாமல் இருப்பதற்கான வாய்ப்பில்லை. 

இதேவேளை, நாட்டின் ஜனாதிபதி இன்னுமொரு நாட்டுக்கு செல்வதாக தீர்மானித்தால் நாட்டை வழிநடத்தும் பொறுப்பை இன்னுமொருவருக்கு ஒப்படைத்துச் செல்ல வேண்டும். அப்போதைய பாதுகாப்பு அமைச்சராகவும் முன்னாள் ஜனாதிபதியே செயற்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டாவது இது தொடர்பில் தீர்மானம் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு எதனையும் செய்யவில்லை. 

அப்போதைய பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கு அந்த பொறுப்புகளை கையளிப்பதில் அவருக்கும் திருப்தி இல்லை என்றால், இந்த பொறுப்புகளை தனக்கு நப்பிக்கையான ஒருவருக்கு ஒப்படைத்திருக்க முடியும். ஆனால் இது எதனையும் முன்னாள் ஜனாதிபதி செய்யவில்லை.

இதேவேளை அடிப்படைவாத கருத்துக்களை பரப்பி வரும் அமைப்புக்களை தடை செய்வது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நாம் வரவேற்கின்றோம். அடிப்படைவாத கருத்துகள் காரணமாக நாட்டில் குழப்பநிலைமை ஏற்படுகின்றது என்றால் அவற்றை தடை செய்வதே சிறந்தது. 

பொதுபலசேனா அமைப்பின் சில கருத்துக்கள் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பொதுபலசேனாலை முற்றுமுழுதான அடிப்படைவாத அமைப்பென கூற இயலாது எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment