(எம்.மனோசித்ரா)
கத்தோலிக்க சபையானது தவறிழைப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதோடு பழிவாங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை திருப்திப்படுத்த முடியாது. அதேபோன்று பழிவாங்குவதால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை என்பதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூறிக் கொள்வதுடன் அனைவரையும் ஆசிர்வதிப்பதாகவும் பாப்பரசர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு புதன்கிழமை கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் இடம்பெற்ற விசேட நிழ்வில் பாப்பரசரின் செய்தியை அறிவிக்கும் போது பாப்பரசரின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ப்ரையன் யுடைக்வே இதனைத் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்ற இன்றைய தினத்தில் நான் பாப்பரசரின் செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றேன். அவர் அவரது ஆசீர்வாதத்தை உங்களுக்கும் உங்களது குடும்பத்திற்கும் வழங்கியுள்ளார்.
கத்தோலிக்க சபையானது தவறிழைப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாகும். பழிவாங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை திருப்திப்படுத்த முடியாது. பழிவாங்குவதால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை என்று பாப்பரசர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செய்தியில் குறிப்பிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஷ்வரர் ஆலய குருக்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் முக்திக்காக நாம் இறைவனை பிரார்த்திக்கின்றோம். தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தோருக்கும் ஆருதல் கூறுகின்றோம் என்று குறிப்பிட்டார்.
இதன் போது ஹசன் மௌலானா மௌலவி குறிப்பிடுகையில், தீவிரவாத செயற்பாடுகளுக்கு முஸ்லிம் மதத்தில் ஒருபோதும் அனுமதி கிடையாது. இந்த தாக்குதல்களை உலகிலுள்ள சகல முஸ்லிம்களும் கடுமையாக எதிர்க்கின்றனர். அடிப்படைவாத கொள்கைகளை கொண்டவர்களின் செயற்பாடுகள் வேறு ரூபங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
அத்தோடு கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் போன்றோரால் தற்போது சமூகத்தில் சாதாரண ஒரு பிரஜையாக வாழ முடிகிறது என்றால், அதேபோன்று அடிப்படைவாத கொள்கைகளைக் கொண்ட முஸ்லிம்களும் மனம் திருந்தி ஏன் வாழ முடியாது? அடிப்படைவாதத்தை கைவிட்டு சிறந்த பிரஜைகளாக வாழுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment