(செ.தேன்மொழி)
போதைப் பொருட்களை பயன்படுத்திவிட்டு வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்காணிக்கக் கூடிய உபகரணங்களை கூடுதல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கைகளை மேலும் அதிகரிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கவனம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
வீதி விபத்துகளை தவிர்க்கும் நோக்கத்தில் மது போதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் தொடர்பான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது மதுபானம் அருந்தியுள்ள சாரதிகளை அடையாளம் காணுவதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் போதுமான அளவு நாட்டில் உள்ளது.
அதற்கமைய வருடத்திற்கு ஒரு இலட்சம் பேர் வரை மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில், அமைச்சர் ரியர் அத்மிரால் சரத் வீரசேகரவின் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றிருந்ததுடன், இதன்போது அமைச்சர் அதற்கான அவசியம் தொடர்பில் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை போதைப் பொருட்களை பயன்படுத்திய நபர்களை அடையாளம் காணுவதற்காக வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை அதிகளவில் நாட்டுக்கு கொண்டுவந்து, அது தொடர்பான சுற்றிவளைப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
நாடளாவிய ரீதியில் இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், போதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்போது அவர்களிடமிருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத் தொகையை அபராதமாக அறவிட முடியும். இதேவேளை அவர்களது சாரதி அனுமதிப்பத்திரத்தை செயலிழக்கச் செய்யவோ, இரத்து செய்யவோ நீதி மன்றத்திற்கு அனுமதியுள்ளதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment